Tuesday, September 29, 2015

ஏக்கருக்கு ரூ.1 லட்சம் வருவாய் - சொட்டு நீர் பாசனத்தில் சாதிக்கும் விவசாயி



சிவகாசி அருகே வெம்பக்கோட்டை கங்கர்செவல் பகுதியில் வெண்டை, மிளகாய், புடலங்காய், தக்காளி போன்ற காய்கறி வகைகளை சொட்டு நீர் பாசன முறையில் சாகுபடி செய்து ஆண்டிற்கு ரூ.5 லட்சத்திற்கும் மேல் வருமானம் ஈட்டி வருகிறார் விவசாயி ராமசாமி.
அவர் கூறியதாவது: எங்கள் பகுதி செவல் மண் நிறைந்தது.வெம்பக்கோட்டை வேளாண் தோட்டத் துறை மூலம் கடந்த 5 ஆண்டு முன் 75 சதவீத மானியத்துடன் சொட்டு நீர் பாசன முறையை 12 ஏக்கரில் அமைத்தேன். இந்த பயன்பாட்டு முறையை கையாண்டதன் மூலம் குறைந்த விதை அளவு கொண்டு, களையின்றி விவசாயம் செய்ய ஏதுவாக அமைந்தது. பாத்திபாசனத்தில் 25 சதவீத நிலங்கள் வீணாகிறது. சொட்டு நீர் பாசன முறையில் 1 ஏக்கரில் விதைப்புக்கு ஏற்ற அளவில் மகசூல் எடுக்க முடியும். 
இதில் வேர் வளர்ச்சி அபரிமிதமாக இருப்பதோடு, அதிக ஆட்செலவு இல்லாமலும் போகிறது. நீர் செலவும் குறைக்கப்படுவதால் விவசாயம் செய்ய உகந்ததாக சொட்டு நீர் பாசனம் இருக்கிறது.
வெண்டை, புடலங்காய், தக்காளி, மிளகாய் வரிசை நடவு முறையில் பயிர் செய்யப்படுவதால் நோய் தொற்று குறைகிறது. அறுவடை செய்யவும் ஏதுவாகவும் அமைகிறது. சொட்டு நீர் பாசன முறையில் 3 நாட்களுக்கு ஒரு முறை பாசன நீர் விட்டால் போதும். வாரத்திற்கு ஒருமுறை பாசன நீரில், நீரில் கரையக்கூடிய ஆல் 19 உரத்தை கரைசலாக்கி கலந்து விடுகிறோம். இதன் மூலம் தலைமணி, சாம்பல் போன்ற போஷாக்கு நிறைந்த சத்துக்கள் கிடைத்து செடி வளர்ச்சிக்கு நல்வகையில் ஊக்குவிக்கிறது.
இவை சீரான முறையில் கடைபிடிப்பதால் வெண்டை 45 நாட்களில் காய் ஒடிக்க முடியும். புடலங்காய் 55 நாட்கள், தக்காளி 70 நாட்கள், மிளகாய் 105 நாட்கள் முதல் அறுவடை செய்ய உகந்ததாக மாறிவிடுகிறது. அதன் பின் தினமும் கிலோ கணக்கில் காய்கள் பெறமுடியும். ஒவ்வொரு காய்கறிகளில் இருந்து ஒரு ஏக்கருக்கு குறைந்தது ரூ. 1 லட்சம் பெற முடிகிறது. அனைத்து காய்கறிகளையும் எடுத்துக் கொண்டால் லாபம் மட்டும் ரூ. 5 லட்சம் வரை பெற முடியும்,''என்றார்.
சந்தேகங்களுக்கு 97869 20592 ல் தொடர்பு கொள்ளலாம்.


No comments:

Post a Comment