Monday, September 28, 2015

ஆரோக்கியம்.. ஆயுள்.. 7 வழி :



1. சத்துப்பட்டியலை  படியுங்கள்...

சிறிய கடையோ, பெரிய கடையோ, விலை மலிவோ, தள்ளுபடி விற்பனையோ! எதுவானாலும் ஆரோக்கியம் தேடுபவர்கள் முதலில் கவனிக்க வேண்டியது சத்துப்பட்டியலைத்தான். என்னென்ன சேர்த்து அந்த உணவு தயாரிக்கப்பட்டுள்ளது? என்னென்ன சத்துகள் அடங்கியுள்ளன? என்பதை குறிப்பிடாத பொருட்களை வாங்கிப் பயன்படுத்துவதை தவிர்த்துவிடுங்கள். மருத்துவரின் ஆலோசனைப்படி உங்களுக்கு என்னென்ன சத்துகள், தாதுகள் சேர்க்கப்பட வேண்டுமோ, அவை அடங்கிய உணவுப் பொருட்களை மட்டுமே தேடிப் பிடித்து வாங்குங்கள். புரதம், கொழுப்பு, மற்றும் கார்போஹைட்ரேட்டுகளின் அளவை தெரிந்து பயன்படுத்துவது ஆரோக்கியமானது.

2. புதியதை  வாங்குங்கள்:

காய்கறிகள், உணவுகள் எதுவானாலும் புதிதாக சந்தைக்கு கொண்டு வரப்பட்டவற்றை தேடிப்பிடித்து வாங்குங்கள். குறைந்தவிலையில், அதிக எடையுள்ள பொருட்களை தருகிறார்கள் என்று வாடி, வதங்கியதையோ, நொந்து, பொடிந்து, மீந்து போனதையோ வாங்காதீர்கள். குறிப்பாக மீன், கோழி மற்றும் இறைச்சி போன்றவை புதிதாக இல்லாவிட்டால் வாங்கு வதை தவிர்த்துவிடுங்கள்.

3. குளிர்பதன  உணவுகள்  வேண்டாம்:


புதிய உணவுகளே மிகச்சிறந்தது. ஆனால் குறிப்பிட்ட உணவுகள் சில பருவங்களில் மட்டுமே விளைவதால் அவற்றை பதப்படுத்தி விற்பனை செய்வது வியாபாரிகளின் வாடிக்கை. குளிர்பதனப் பெட்டியில் வைத்தும், பதப்படுத்தி பாக்  கெட்டுகள், டப்பாக்களில் அடைத்தும் அத்தகைய பொருட்கள் விற்கப்படுகின்றன.   குளிர்பதன பெட்டியில் வைத்து பாதுகாக்கப்படும் காய்கறி களைவிட, வெளியில் வைத்து புதிதாக விற்கப்    படும் காய்கறிகள் சிறந்தவை. குளிர்விக்கும்போது காய்கறிகளின் தோல் பகுதிகள் பாதிக்கப்படும். பெரும்பாலான உணவுகளில் தோல்பகுதிகளில்தான் அவசியமான சத்துப்பொருட்கள் இருக்கின்றன. எனவே குளிர்பதன பெட்டியில் வைத்திருக்கும் காய்கறியைவிட, வெளியில் வைத்திருக்கும் லேசாக வாடிய காய்கறிகளைக்கூட வாங்கி சமைத்துவிடலாம். அதே நேரத்தில் நீண்டகாலம் கெட்டுப்போகாமல் பாதுகாக்கப்படும் டப்பா உணவுகளைவிட, குளிர்பதன பெட்டியில் இருக்கும் உணவுகள் பரவாயில்லைதான்!

4. தொழில்முறை உணவுகளை தவிர்க்கலாம்:

உணவுப் பண்டங்களை பதப்படுத்தியும், உலர்த்தியும் விதவிதமான உணவுகளாக்கி வழங்குவது இன்று சிறந்த தொழிலாக இருக்கிறது. உருளைக் கிழங்கை சிப்ஸ்களாக தயாரித்து விற்பது, பாக்கெட்டில் அடைக்கப்படும் பீட்சாக் கள், நொறுக்குத் தீனிகள் போன்றவற்றை இதில் சேர்க்கலாம். நீண்டகாலம் கெட்டுப்போகாமல் இருக்க வேதிப்பொருட்கள் சேர்ப்பதுடன், முக்கியமான பல  சத்துப் பொருட்கள் நீக்கப்பட்டே இவை தயாரிக்கப்படுகின்றன. மதிப்பு கூட்டப்பட்ட இந்த உணவுப் பண்டங்கள் விலை அதிகமானதாக இருந்தாலும், உடலுக்கு ஆரோக்கியம் தருவதாக இருப்பதில்லை. இவற்றை வாங்குவதை தவிர்ப்பதன் மூலம் ஆரோக்கியம் பேணுவதுடன், கணிசமான காசையும் மிச்சம் பிடிக்கலாம்.

5. இயற்கை உணவுகளின் விலை:

இயற்கை உணவுப் பொருட்களை விற்கும் அங்காடிகள் குறைவாகவே இருக்கின்றன. அவற்றின் விலையும் யோசிக்க வைக்கும் வகையில் அதிகமாக இருக்கலாம். விலையை வைத்து மட்டும் இயற்கை உணவுகளை ஒதுக்கிவிடாதீர்கள். அதிக பூச்சிக் கொல்லிகள் சேர்க்கப்படாமல் உற்பத்தி செய்யப்படும் இயற்கை உணவுகளுக்கு சற்று விலை அதிகம் கொடுக்கலாம். அது ஆரோக்கியத்திற்கு நல்லதே. நாம் இயற்கை உணவுகளை பயன்படுத்துவதை பெருக்கும்போது இவைகளின் விலை குறையத் தொடங்கிவிடும்.

6. தரமும், பழக்கமும்:

தரமான பொருட்களை வாங்கி பயன்படுத்துவதை வழக்கமாக்கிக் கொண்டால் ஆரோக்கியத்தை அன்றாடம் உணரலாம். விலை குறைந்தது என்று மீந்துபோன பொருட்களை வாங்குவதும், விலை அதிகமிருப்பதெல்லாம் சத்தானவை என்று பதப்படுத்தப்பட்ட பொருட்களை வாங்குவதும் ஆரோக்கியமானதல்ல. கவனமின்றி இறைச்சிகளை வாங்கி பயன்படுத்தினால் உடல் எடை அதிகரிப்பது, சத்து குறைவது– கொழுப்பு அதிகரிப்பது என அவதிப்பட வைக்கும். தரமான பொருட் களை பயன்படுத்தும்போது சில வாரங் களிலேயே உங்கள் உற்சாகம் பெருகுவதையும், உடல் ஆரோக்கியமாக இருப்பதையும் உணரத் தொடங்குவீர்கள்.

7. இறைச்சியை  தேர்வு  செய்ய...

ஆடு, மாடு, பன்றி இறைச்சிகளை வாங்கும்போது கொழுப்பு தவிர்த்து வாங்குவதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். ஏனெனில் விலங்குகளின் உடலில் சுரக்கும் ஹார்மோன் நச்சுகள், நுண்கிருமிகள் அனைத்தும் பெரும்பாலும் கொழுப்புத் திசுக்களில்தான் தஞ்சம் அடையும். விலா எலும்புகளை சுற்றிய தசைகள் மற்றும் பின்னங்கால் பெருந்தொடை இறைச்சியை தேர்வு செய்வது நல்லது. 

உடனடியாக வெட்டி விற்கப்படும் இறைச்சியை வாங்கி அடுத்த சில மணி நேரங்களுக்குள் சமைத்து சாப்பிடுவது நல்லது. இரவில் வாங்கிவிட்டு, காலையில் சமைப்பதோ, பிரிட்ஜ்ஜில் வைத்திருந்ததால் கெட்டுப்போயிருக்காது என்று நினைப்பதோ தவறு.

ஆரோக்கியமான கோழி இறைச்சி சாப்பிட விரும்புபவர்கள், வீடுகளில் வளர்க்கப்படும் நாட்டுக் கோழி, சேவல்களை வாங்கி சமைக்கலாம். பண்ணைகளில் வளர்க்கப்படும் கறிக்கோழிகள், கட்டுப்படுத்தப்பட்ட சூழலில், நிறைய இறைச்சிக்காக கொழுத்த தீவனங்கள் கொடுத்து வளர்க்கப்பட்டதாக இருக்கும். போதுமான சூரியஒளி, இடவசதி, சத்துகள் கிடைக்காமல் வளரும் இவை அதிக நோய் எதிர்ப்பு சக்தியின்றி காணப்படும். மரபணு முறையிலும், ஊசி மருந்துகள் மூலமும்கூட கோழிகள் வளர்க்கப்படுகின்றன. இவை நடப்பதற்குக்கூட சக்தியற்றவையாக வளரும். அதை வாங்கிச் சாப்பிட்டுவிட்டு ஆரோக்கியமாக இருப்பதாக நினைத்துக் கொள்ள வேண்டாம். கோழி இறைச்சியில் தோல்பகுதியை சாப்பிடுவதை தவிர்த்திடுங்கள். மீன்களில் பண்ணை மீன்களைவிட கடல் மீன்களும், ஏரி மீன்களும் சிறந்தவை. 

வழக்கமாக உணவுப் பொருட்கள் வாங்கும் கடைக் காரர் மற்றும் இறைச்சி கடைக்காரரிடம் தனக்கு இதுபோன்ற உணவுகள்தான் வேண்டும் என்பதை கண்டிப்பாக கூறிவிடுங்கள். அவற்றை மட்டுமே பயன்படுத்துவதை உறுதிப்படுத்துங்கள். ஆரோக்கிய ஆயுள் பெறுங்கள்!

Source : Dailythanthi

No comments:

Post a Comment