Tuesday, October 27, 2015

சாகுபடி செய்யும் முன் மண்பரிசோதனை மிக அவசியம்


விருதுநகர், : மண் பரிசோதனை செய்து அதில் உள்ள வளங்களை தெரிந்து கொண்டு அதற்கேற்ப பயிர்களை சாகுபடி செய்தால் எதிர்பார்ப்புக்கு அதிகமாக விவசாயிகள் லாபம் பெறலாம் என வேளாண்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.இதுகுறித்து அவர்கள் மேலும் கூறியிருப்பதாவது:மண் மாதிரி ஆய்வுக்கு அரை கிலோ மண் தேவைப்படும். அந்த மண் சாகுபடி செய்யப்படும் நிலத்திற்கு உகந்ததாக இருந்தால் அதற்கேற்ற பயிர்களை விதைக்கலாம். இந்த ஆய்வானது ஒவ்வொருமுறை பயிரிடும்போதும் விவசாயிகள் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். 

ஒரு பயிர் அறுவடை செய்தவுடன் அடுத்த பயிருக்கு நிலத்தை தயார்செய்யும் இடைபட்ட காலத்தில் இந்த மண்மாதிரி பரிசோதனையை விவசாயிகள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். நிலத்தின் ஒவ்வொரு பகுதியிலும் மண் வெவ்வேறு நிறங்களில் இருந்தால் அந்தந்த மண்களை தனியாக எடுத்து பரிசோதனைக்கு அனுப்பி வைக்க வேண்டும். எரு குவித்த இடம், வரப்பு வாய்க்கால் மற்றும் மர நிழல் அருகில் உள்ள மண்ணை மாதிரி பரிசோதனைக்காக எடுத்து வரக்கூடாது.
 

ஒவ்வொரு வயலுக்கும் தனித்தனி மாதிரிகளை கடைபிடிக்க வேண்டும். மண்மாதிரி எடுக்கப்படும் இடத்திலுள்ள இலை, சருகு, புல், ஆகியவற்றை மேல்மண்ணை செதுக்காமல் அப்புறப்படுத்த வேண்டும். நெல், கேழ்வரகு போன்ற தானியப்பயிர்கள், எண்ணெய் வித்துக்கள், பருப்பு வகைகளுக்கு அரை அடி ஆழமும், கரும்பு, பருத்தி, வாழை, காய்கறி பயிர்களுக்கு முக்கால் அடியும், தென்னைக்கு 3 அடியும், மா, சப்போட்டா போன்ற பழ மரங்களுக்கு 6 அடி ஆழத்தில் குழி வெட்டி அடுக்கு வாரியாக தனித்தனியாக மண் மாதிரி எடுக்க வேண்டும்.

காலப்பயிர்களுக்கு ‘வி’ வடிவில் குழி வெட்ட வேண்டும். வெட்டிய குழியின் இரு ஓரங்களிலும் மண்வெட்டியின் தகட்டால் மேலிருந்து கீழ் வரை 1 சென்டிமீட்டர் கனத்திற்கு சீராக மண்ணை சுரண்டி எடுத்து சேகரிக்க வேண்டும். இதேபோல் 1 ஏக்கருக்கு 10 முதல் 15 இடங்களில் மண் சேகரித்து அதை சுத்தமான பிளாஸ்டிக் பை அல்லது சாக்கில் கொட்டி, நன்றாக கலந்து கல், கண்ணாடி, வேர் தண்டுகளை அப்புறப்படுத்த வேண்டும்.
 

பின்பு, நான்கு சம போக முறையில் அரைக்கிலோ மண்ணை எடுத்து துணிப்பையில் போட்டு கட்ட வேண்டும். மண் மாதிரியுடன் விவசாயி பெயர் மற்றும் அஞ்சல் முகவரி, கிராமத்தின் பெயர், நிலத்தின் பெயர், இறவை அல்லது மானாவாரி, பயிரிடப்படுவதற்கு முந்தைய பயிரின் விபரம், அடுத்து பயிரிடப் போகும் பயிரின் விபரம் அனைத்தையும் தெரிவிக்க வேண்டும். மேலும் தகவல்களுக்கு அருகில் உள்ள வேளாண்துறை அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம் என வேளாண்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.


No comments:

Post a Comment