Tuesday, October 27, 2015

சின்ன சின்ன செய்திகள்



ஏற்றுமதிக்கேற்ற முருங்கை சாகுபடி: கடலூர் மாவட்டம், அண்ணா கிராமம் ஒன்றியம் பண்ருட்டிக்கு அருகில் உள்ள ஒறையூரைச் சேர்ந்த அய்யப்பன் பல ஆண்டுகளாக முருங்கை சாகுபடி செய்கிற அனுபவத்தை விவரிக்கிறார். செடி முருங்கையை பொறுத்தமட்டில் விதைகளை அவரே தயார் செய்கிறார். தரமான மற்றும் அதிகப்படியான காய்கள் கொண்ட மரத்தை தேர்வு செய்து அதில் அடிக்கிளையில் காய்க்கும் காய்களை விட்டு விட்டு பிற காய்களை முற்ற விட்டு, நன்கு காயவைத்து நல்ல வீரியமான விதைகளைப் பிரித்து எடுக்கிறார். மண்புழு உரத்தை மண்மணலோடு கலந்து பாக்கெட் போட்டு, ஒரு பாக்கெட்டுக்கு 2 விதைகளை விதைத்து, 15-20 நாட்களுக்குள்ளாக எடுத்து செடியை நட்டு விடுகிறார். நிலத்தை உழுது சமப்படுத்தி 8 அடிக்கு 6 அடி இடைவெளியில் 1 அடி ஆழமுள்ள குழிகளைத் தோண்டி, மேல் மண்ணால் மூடி 2 செடிகளை நட வேண்டும்.
முருங்கைக்கு பொதுவாக அதிகமாக தண்ணீர் தேவை இருக்காது. வாரம் ஒருமுறை 2 மணி நேரம் சொட்டுநீர்ப் பாசனம் செய்தால் போதும். உரம் மருந்து போன்றவற்றையும், டிரிப் மூலமாகவே கொடுத்திடலாம். செடி வெச்சு 4 மாதம் கழித்து டி.ஏ.பி.யை செடிக்கு 100 கிராம் அளவுக்கு செடியைச் சுற்றி குழியைப் பறித்து வைக்க வேண்டும். 19:19:19 என்ற கலப்பு உரத்தை ஏக்கருக்கு 2 கிலோ அளவில் வாரத்திற்கு ஒருமுறை கொடுக்கனும்.
பூ எடுக்கும் வரைக்கும் ஈரத்தன்மை அதிகமாக இருக்கக் கூடாது. பூக்கும் தருணத்தில் சைட்டோசைம் இலைவழி திரவத்தை கொடுக்கனும். பூ பூக்கறதுக்கும், காய்ப்பிடிப்பதற்குமான மருந்துகளை 15 நாள் இடைவெளியில் அடிச்சிட்டே வரனும். காய்ப்புழுவிற்கு இமாமெக்டின் பென்சோயேட் மருந்தை சரியான நேரத்தில் அடிக்கனும். சொட்டுநீர்ப்பாசனம், வேர்வழி உரம், வளர்ச்சி ஊக்கிகள், நுண்ணூட்டச்சத்து உரங்கள் பயோ ஆர்கானிக்ஸ் ஆகியவற்றை கொடுப்பதால் தொடர் விளைச்சலுக்கும், பசுமை மாறா காய்களை ஏற்றுமதி சந்தைக்கு அனுப்புவதற்கு உண்டான வெற்றி சூத்திரங்கள் என குறிப்பிடுகிறார் அனுபவ விவசாயி. மேலும் விபரங்களுக்கு : சி.அய்யப்பன், ஒறையூர். அலைபேசி: 93676 46167.

சின்ன வெங்காயத்தில் அதிக லாபம் பெற: விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து 8 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நாச்சியார்பட்டி கிராமத்திலிருக்கும் விவசாயி ராஜேஸ்குமார் 60 சென்டு நிலத்தில் 70 நாட்களில் 90 ஆயிரம் ரூபாய் வரை லாபம் எடுத்திருக்கிறார். சின்ன வெங்காயத்திற்கு சம்பா பட்டம் (ஆனி முதல் ஆவணி வரையும், குறுவைப்பட்டத்திற்கு ஐப்பசி முதல் தை மாதம் வரை) ஆகிய இரண்டு பட்டங்களும் சிறந்தவை.
குறுவைக்கு புரட்டாசி மாதக் கடைசியில் ஆட்டுக்கிடை அமைத்து காய விடலாம். சம்பா சாகுபடிக்கு ஆனி மாதமும் குறுவைக்கு ஐப்பசி மாதமும் ஓர் உழவு அடித்து விட்டு உழவித்த அன்றே 10 அடி நீளம், 5 அடி அகலத்தில் பாத்திகள் அமைக்க வேண்டும். 60 சென்ட் நிலத்திற்கு 250 பாத்திகள் வரை வரும். பாத்தி எடுத்த உடனே தண்ணீர் பாய்ச்சி, தலைப்பகுதி மேலே இருக்குமாறு வெங்காயத்தின் முக்கால் பகுதியை மண்ணுக்குள் புதைத்து நடவு செய்து தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.
வெங்காயத்திற்கு விலை இல்லாத வேளையில் பட்டறை அமைத்து சேமித்து வைக்கலாம். கிழக்கு மேற்காகத்தான் பட்டறை அமைக்க வேண்டும். மர நிழலில் பட்டறை அமைத்தால் நல்லது. தரையிலிருந்து ஒரு அடி உயரத்தில் செங்கல் வைத்து அடுக்கி, அதன் மேல் இரண்டரை அடி அகலத்தில் தேவைக்கேற்ற நீளத்தில் அகத்திக் கம்புகளை குறுக்கும் நெடுக்குமாக அடுக்க வேண்டும். அதன் மீது காய்ந்த நாற்று, தென்னங்கீற்று அல்லது பனை ஓலையைப் போட வேண்டும். வெங்காயத்தை அறுவடை செய்த உடனேயே பட்டறையில் வைக்க கூடாது. அறுவடை செய்த 45 நாட்கள் களத்திலேயே காயவிட்டு முதல் நாள் முக்கால் அடி, 2வது நாள் 2 அடி என கொஞ்சம் கொஞ்சமாக எடை ஏற்ற வேண்டும். 2 அடி உயரம் வரை மட்டமாக அடுக்கி விட்டு 2 அடிக்கு மேல் கூம்பு வடிவில் அடுக்க வேண்டும். பட்டறையில் அடுக்கி முடித்த பிறகு, வெங்காயத்தின் மீது பனை ஓலை அல்லது சாக்கு போட்டு மூட வேண்டும். இந்தப் பட்டறையில் 7 மாதங்கள் வரை வெங்காயத்தைச் சேமித்து வைக்கலாம். தொடர்புக்கு: ராஜேஷ்குமார், அலைபேசி: 99527 11002.
-
 டாக்டர் கு.சௌந்தரபாண்டியன்.
Description: http://c13.zedo.com/OzoDB/0/0/0/blank.gif


http://www.dinamalar.com/supplementary_detail.asp?id=27537&ncat=7

No comments:

Post a Comment