Tuesday, October 27, 2015

சூரிய சக்தி பம்புசெட் அமைக்க வேளாண் பொறியியல் துறையை விவசாயிகள் அணுகலாம்


விருதுநகர், : சூரிய சக்தியால் இயங்கும் பம்புசெட் அமைக்க விவசாயிகள் வேளாண் பொறியியல் துறையை அணுகலாம் என வேளாண் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.விவசாயிகள் தங்களது வேளாண்நிலங்களில் சூரிய மின்சக்தி பேனல்கள், ஆழ்துளை கிணற்றில் சோலார் பம்புசெட்டுகள் அமைக்க, திறந்த வெளிகிணறு, தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டிகளிலும் சோலார் பம்பு செட்டுகள் அமைக்க 80 சதவீத மானியத்தில் அமைத்துக் கொடுக்கப்படுகிறது. அடிப்படை விலையில் 80 சதவீத மானியம் போக 20 சதவீத தொகை மற்றும் வரியை விவசாயிகள் செலுத்தனால் போதுமானது. ரூ.3.99 லட்சம் மதிப்பிலான நிலையான பேனல்களுக்கு விவசாயிகள் ரூ.95 ஆயிரம் செலுத்தினால் போதுமானது.

திறந்த வெளி கிணறுகளில் ரூ.5.02 லட்சம் மதிப்பிலான பம்பு செட்டுகள் அமைக்க விவசாயிகள் 1.17 லட்சம் கட்டினால் போதுமானது. விருப்பம் உள்ள விவசாயிகள் வேளாண் பொறியியல் துறையை அணுகி கம்ப்யூட்டர் பட்டா அசல், அடங்கல் பட்டா, விசைக்குழாய் அமையும் இட நில வரைபடம், குடும்ப அட்டை நகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள் 2, சாதிச்சான்று நகல் ஆகியவற்றுடன் விண்ணப்பிக்கலாம். விவசாயிகள் சூரிய ஒளி விசைக்குழாயை வேளாண் உபயோகத்திற்கு மட்டும் பயன்படுத்த வேண்டும்.
 

விருதுநகர் மாவட்டத்தில் இதுவரை தானாக இயங்கும் பேனல்கள் மூலம் 21 விவசாயிகள் ஆழ்குழாய் கிணற்றிலும், 39 விவசாயிகள் திறந்தவெளி கிணற்றிலும், 2 விவசாயிகள் தரைமட்ட தொட்டியிலும் ஆக மொத்தம் 62 விவசாயிகள் சோலர் பம்பு செட்டுகளை அமைத்துள்ளனர். சோலர் பம்பு செட் அமைக்க விரும்பு விவசாயிகள் விருதுநகர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள வேளாண் பொறியியல் துறையை அணுகி பயன்பெறலாம் என தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment