Thursday, November 26, 2015

இலை மடக்குப் புழுவின் பாதிப்பில் இருந்து நெற்பயிரைக் காக்கும் வழிகள்


 தற்போதுள்ள பருவத்தில், இலை மடக்குப் புழுக்களால் நெற்பயிர்கள் அதிக சேதத்துக்கு உள்ளாகின்றன' என்று திரூர் நெல் ஆராய்ச்சி நிலைய பூச்சியியல் துறை திட்ட ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் சுமதி தெரிவித்தார்.
 இதுகுறித்து, அவர் மேலும் கூறியதாவது:
 
தற்போதுள்ள காலகட்டத்தில், விவசாயம் செய்வது மிகவும் சிரமமான காரியமாக உள்ளது. இதில், விவசாயிகள் பல்வேறு போராட்டங்களைச் சந்திக்க வேண்டியுள்ளது.
 
இந்த நிலையில் பாடுபட்டு வளர்க்கும் நெற்பயிர்களை, இலை மடக்குப் புழுக்கள் சேதப்படுத்துகின்றன. தற்போதுள்ள பருவத்தில், தமிழகத்தில் இலை மடக்குப் புழுக்களால் பரவலாக பாதிப்புகள் ஏற்படுகின்றன.
 
இதில், இளம் புழு தன் உமிழ்நீரைக் கொண்டு மெல்லிய பட்டு நூல் போன்ற இழைகளால் இலையின் ஓரங்களைப் பிணைத்து அல்லது இலையின் நுனிப்பகுதியை அடிப்பகுதியுடன் மடக்கி இணைத்து அதனுள் இருந்துகொண்டு பச்சையத்தைச் சுரண்டி உண்பதால் அப்பகுதி வெண்மையாக மாறிவிடும்.
 
அதிக அளவு பாதிக்கப்பட்ட பயிரில், இலைகள் வெண்மையான சருகு போலக் காணப்படும். இதனால், இலைகள் ஒளிச்சேர்க்கை செய்வதும் பாதிக்கப்பட்டு வளர்ச்சி குன்றி விடும்.
 
பராமரிப்பு, மேலாண்மை முறைகள்: வயல்களில் உள்ள களைச் செடிகளை அகற்ற வேண்டும். விளக்குப் பொறி அமைக்க வேண்டும். (மாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை)
 
நிழல் படும் இடங்களில், தாக்குதல் அதிகமாவதால் கூடுதல் பாதுகாப்பு அவசியம்.
 
எம்டியு 3 இரகம், இப்பூச்சிக்கு மிதமான எதிர்ப்புத் திறன் கொண்டது.
 
மண்பரிசோதனைப் பரிந்துரைப்படி, தழைச்சத்து உரத்தினை 2-3 முறை பிரித்து இட வேண்டும்.
 
டிரைக்கோகிரம்மா கைலோனிஸ் என்ற முட்டை ஒட்டுண்ணியை, ஒரு எக்டேருக்கு 5 சிசி வீதம் நடவு நட்ட 37, 44, 51-ஆவது நாள் என (மூன்று முறை) வெளியிட வேண்டும்.
 
பொருளாதார சேத நிலையை அடைந்தவுடன் கீழ்க்கண்ட பூச்சிக் கொல்லிகளுள் ஏதேனும் ஒன்றை, ஒரு எக்டேருக்குத் தெளிக்க வேண்டும்:
 
குளோர்பாரிபாஸ் 20 இசி - 1250 மி.லி., டைகுளோர்வாஸ் 76 எஸ்.சி - 625 மி.லி., ப்ளுபென்டிமைடு 39.35 எஸ்சி - 50 மி.லி., கார்டாப்ஹைட்ரோ குளோரைடு 50 எஸ்பி - 1000 கிராம், அசிப்பேட் 76 எஸ்.பி - 625 கிராம் இட்டு பாதுகாக்க வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment