Thursday, January 28, 2016

பிப்.2-இல் உலக தண்ணீர் தின விழா


தண்ணீரின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் புதுச்சேரியில் வரும் பிப்ரவரி 2ஆம் தேதி உலக தண்ணீர் தின விழா நடக்கிறது.
 பாண்டிகேன் புரோபிர் பேனர்ஜி, ஹோப் நிறுவனம் ஜோசப்  விக்டர் ராஜ், புதுச்சேரி அறிவியல் இயக்கம் தட்சிணாமூர்த்தி, அலையன்ஸ் பிரான்சே ஒளிவியர் ஆகியோர் கூட்டாக வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது: உலகளாவிய அளவில் தண்ணீர் பிரச்னை உள்ளது.
தண்ணீர் மாசுபடுவதற்கு மனிதனின் பலதரப்பட்ட செயல்பாடுகள் காரணமாக உள்ளது. நகரங்களினால் உண்டாகும் மாசுக்கள், தொழிற்சாலை கழிவுகள், விவசாய நிலங்கள் வேறு பயன்பாட்டிற்கு மாறுவதால், நிலத்தடி நீர்மட்டம் குறைதல், கடல்நீர் உள்புகுவதால், நிலத்தடிநீர் உப்பு நீராக மாறுதல், வியாபார நோக்கில் நிலத்தடிநீர் உறுஞ்சப்படுதல், காலநிலை மாறுபாடுதல் ஆகியவை சில காரணங்களாகும்.
 இவற்றை கட்டுப்படுத்தி விலைமதிப்பற்ற தண்ணீரை பாதுகாக்க வேண்டும் என்பன குறித்து வரும் பிப்ரவரி 2ஆம் தேதி உலக தண்ணீர் விழா நடைபெற உள்ளது.  ஆரோவில்லில் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் கருத்துக் கேட்புக் கூட்டம் குழு விவாதம், பொருள்காட்சி நடைபெறுகிறது. தொடர்ந்து 7 வாரங்கள் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெறுகிறது.
 பிப்ரவரி 3 முதல் 8 வரை பாகூரிலும், பிப்ரவரி 9 முதல் 15  வரை கடலூரிலும், பிப்ரவரி 16 முதல் 22 வரை புதுவையிலும், 23 முதல் 29 வரை ஆரோவில்லிலும், மார்ச் 1ஆம் தேதி முதல் 7ஆம் தேதி வரை வில்லியனூரிலும், 15 முதல் 21 வரை மரக்காணத்திலும் நடைபெற உள்ளது.
இந்நிகழ்ச்சியின்போது தண்ணார்வளர்கள் மூலம் உள்ளூர் குளம், ஏரி மற்றும் வாய்க்கால்கள் தூய்மைப்படுத்தப்பட உள்ளன எனத் தெரிவித்தனர்.

Source  : Dinamani

No comments:

Post a Comment