Tuesday, February 23, 2016

குழித்தட்டே லாபம் தரும்

உற்பத்தி செய்யும் நாற்றுக்கள் தரமாக, வீரியமுடன், பூச்சி, நோய் தாக்குதலின்றி இருக்க வேண்டும். அகலப்பாத்தி அல்லது மேட்டுபாத்தி மூலமோ, வயலில் நேரடி உற்பத்தி செய்யும் போது நாற்றுக்கள் மெலிந்து வீரியம் குறைந்து காணப்படும். பராமரிப்பு செலவு அதிகமாகிறது; உற்பத்தி குறைகிறது. 
குழித்தட்டுகள் சந்தையில் எளிதாக கிடைக்கின்றன. காய்கறி பயிர்களுக்கு 0.8 மி.மீ., தடிமன் கொண்ட 98 குழிகள் உள்ள குழித்தட்டுகளை பயன்படுத்தலாம். அதிகப்படியான நீர் வழிவதற்கு ஏதுவாக அடியில் துவாரங்கள் இருக்கும். பதப்படுத்தப்பட்ட தென்னை நார்க்கழிவுகளை வளர் ஊடகமாக பயன்படுத்தலாம். 
காய்கறி பயிர், பூக்கள் மற்றும் நாற்று மூலம் பயிர் செய்யும் அனைத்து பயிர்களையும் உற்பத்தி செய்யலாம். காய்கறி விதைகளை சூடோமோனாஸ் பூஞ்சாணகொல்லியால் விதை நேர்த்தி செய்து குழிக்கு ஒரு விதை இட்டு நார்க்கழிவால் மூடவேண்டும். தட்டுக்களை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி வைத்து வெளிச்சம் புகாதவாறு பாலிதீன் தாள் கொண்டு 5 நாட்கள் மூடிவைக்க வேண்டும். அதன்பின் விதை முளைவிட ஆரம்பிக்கும். இவற்றை நிழல்வலை நாற்றங்காலில் அடுக்கி வைக்க வேண்டும். இம்முறையில் பராமரிப்பு செலவு குறைவு. 
சமவெளிப் பகுதியில் 50 சதவீத நிழல் தரும் பச்சைநிற நிழல்வலையும், மலைப்பகுதியில் 30 சதவீதம் நிழல் தரும் கருப்புநிற வலையும் பயன்படுத்தலாம். வைரஸ் நோய் பரப்பும் பூச்சிகள், நேரடியாக நாற்றுக்களை தாக்கும் பூச்சிகளை பாதுகாக்க நான்கு பக்கமும் நைலான் வலை அமைக்க வேண்டும். 

Source : Dinamalar

No comments:

Post a Comment