Thursday, February 25, 2016

களைகள், நோய் கட்டுப்படுத்த கோடை உழவு அவசியம்

களைகள், நோயை கட்டுப்படுத்த கோடை உழவு அவசியம் என, வேளாண்மைத்துறை அதிகாரிகள் வலியுறுத்தினர்.

அவர்கள் கூறியதாவது: பயிர் அறுவடைக்கு பின் நிலத்தில் ஆழமான வெடிப்புகள் ஏற்பட்டு அடிமண் ஈரம் ஆவியாகிறது. இதனால் சாகுபடி சமயங்களில் மீண்டும் தண்ணீர் பாய்ச்சும்போது அடியில் சென்றுவிடும். மேலும் உழவின்போது வளமான மேல் மண் துகள்கள் வெடிப்புகள் வழியாக அடிமட்டத்திற்கு சென்றுவிடும்.

இதனை தடுக்க கோடை உழவு அவசியமாகிறது. இதன்மூலம் அதிக வெடிப்பு ஏற்படாமல் மண் பொல, பொலவென்று இருக்கும். முன்பருவ விதைப்புக்கு உதவுகிறது. அடிமண் ஈரம் நீண்ட நாள் பாதுகாக்கப்படுகிறது. அறுவடைக்குபின் எஞ்சியுள்ள கட்டை பயிர்கள் மண்ணில் மூடப்பட்டு மக்கி விடுகிறது. இதனால் பூச்சி, நோய் தொல்லை குறைகிறது. மேலும் கட்டை பயிர் உரமாகி நுண்ணுயிர்களுக்கு உணவாகி மண் வளத்தை அதிகரிக்கிறது. கோடை உழவு நிலத்தின் சரிவுக்கு குறுக்காக உழவு செய்ய வேண்டும்.

கோடை உழவு செய்யாவிட்டால் களைகள் அதிகமாகும். அறுவடைக்கு பின் எஞ்சியுள்ள கட்டைப் பயிர்கள் பூச்சிகள், நோய் கிருமிகளின் உறவிடமாக மாறிவிடும். இதனால் பயிர்களை எளிதல் நோய் தாக்கும், என்றனர்.

Source : dinamalar

No comments:

Post a Comment