Wednesday, March 30, 2016

குறைந்த தண்ணீரில் அதிக லாபம் பருத்தி சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்

திருவிடைமருதூர் பகுதியில் குறைந்த தண்ணீரில் அதிக லாபம் தரும் பருத்தி சாகுபடியில் விவசாயிகள் ஆர்வமாக ஈடுபட்டு வருகின்றனர். இதனால் டீசலுக்கு மானியம் வழங்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர். 
தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் மற்றும் திருப்பனந்தாள், கும்பகோணம், பாபநாசம் உள்ளிட்ட ஒன்றிய பகுதிகளுக்கு உட்பட்ட கிராம பகுதிகளில் மின்மோட்டாரை கொண்டு மூன்றாம் போகமாக விவசாயிகள் நெல் சாகுபடி செய்து வந்தனர். கடந்த சில ஆண்டுகளாக மின்வெட்டு ஏற்பட்டு வருவதால் போதிய பாசன நீர் கிடைக்காமல் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் கடந்த காலங்களில் காய்ந்ததை அடுத்து மாற்றுப்பயிராக  குறைந்த தண்ணீரை கொண்டு சாகுபடி செய்யக்கூடிய பருத்தியை 8,000 ஏக்கரில் பயிரிட்டு வருகின்றனர். 

அதிக பரப்பளவில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டுள்ள திருவிடைமருதூர் அடுத்த ஏணநல்லூர் விவசாயிகள் கூறும்போது, கடந்த காலங்களில் கோடையில் விவசாய மின்மோட்டாரை நம்பி நெற்பயிரை பயிரிட்டோம். ஆனால் கடும் மின்வெட்டு ஏற்பட்டு போதிய பாசனநீர் கிடைக்காததால் நெற்பயிர்கள் காய்ந்து பதராகி நஷ்டம் ஏற்பட்டது. இதனால் சில ஆண்டுகளாக குறைந்த தண்ணீரை கொண்டு பயிர் செய்யக்கூடிய 6 மாத பயிரான பருத்தியை சாகுபடி செய்து வருகிறோம் என்றனர். 

இதுகுறித்து விவசாயி மனோகர் கூறுகையில், ஒரு ஏக்கர் பருத்தி சாகுபடியில் விதை விதைத்தல், செடிகளை வெட்டுதல், தண்ணீர் பாய்ச்சுதல், உரமிடுதல், பூச்சி மருந்து தெளித்தல் என பல்வேறு பராமரிப்பு செலவு செய்வதற்கு ரூ.25,000 முதல் ரூ.30,000 வரை செலவாகிறது. 15 முதல் 18 குவிண்டால் வரை அறுவடையில் பருத்தி பஞ்சு கிடைப்பதால் ரூ.70 ஆயிரம் வரை வருமானம் கிடைக்கும். 

இதில் செலவுகள் போக ரூ.40 ஆயிரம் மிச்சம் ஏற்படுகிறது. மற்ற பயிர்களைவிட பருத்தியில் கூடுதலான லாபம் கிடைப்பதால் தற்போது என்னை போன்ற விவசாயிகள் ஆர்வத்துடன் சாகுபடி செய்து வருகின்றனர். குறைந்த அளவில் தண்ணீர் போதும் என்ற நிலையிலும் இதற்கே தற்போது போதிய மின்சாரம் கிடைப்பதில்லை. அதுபோன்ற நேரங்களில் வாடகைக்கு இன்ஜினை எடுத்து டீசல் மூலம் தண்ணீர் பாய்ச்சுவதால் கூடுதல் செலவாகிறது. குறைந்து வரும் விவசாயத்தை காப்பாற்ற தமிழ அரசு டீசலுக்கான மானியத்தை வழங்க வேண்டும் என்றார்.

source : dinakaran

No comments:

Post a Comment