Wednesday, April 20, 2016

தையல்காரரும் வாழையிலையும்...


பத்து மாதம் கஷ்டப்பட்டு உருவாக்கப்பட்ட வாழைத் தார் கமிஷன் மண்டியில், பேரம் படியாமல் அடிமாட்டு விலைக்கு போகும்போது பாடுபட்ட விவசாயியின் மனது துடிக்கும். திட்டமிட்டு வாழையை பயிரிட்டால் வெற்றி காணலாம் என்கிறார் காரைக்குடி புதுவயல் கருநாவல்குடி விவசாயி பா.மணி.
பகல் நேரத்தில் டெய்லராகவும் காலை, மாலையில் விவசாய வேலையிலும் தீவிரம் காட்டி வருகிறார். 4.5 ஏக்கரில் வாழை, மல்லிகை, மிளகி நெல், சிவப்பு கவுனி என இயற்கை விவசாயம் செய்கிறார்.
அவர் கூறியது: ஒன்றரை ஏக்கரில் வாழை சாகுபடி செய்துள்ளேன். 10 மாதம் தண்ணீர் பாய்ச்சி வளர்க்கும் வாழைத்தார் ரூ.200 முதல் ரூ.300 வரை மட்டுமே விலை போகிறது. அதற்கு பதிலாக வாழை இலையை வெட்டி விற்றால் மாதம் ரூ.30 ஆயிரம் சம்பாதிக்கலாம்.
ஒரு வாழையில் 4 முதல் 5 பக்க கன்றுகள் வரும். இவற்றில் மாதம் 15 இலைகள் உருவாகும். ஐந்து இலை கொண்ட ஒரு அடுக்கு ரூ.30. ஒரு வாழையில் மாதம் ரூ.90 வீதம் பத்து மாதத்தில் ரூ.900 கிடைக்கும். இதன் மடல்கள் ஆடு, மாடுகளுக்கு உணவாகிறது. 
காய்ந்த இலைகளை அதன் கீழேயே மூடாக்கு போட்டு மட்க வைப்பதால் சிறந்த உரமாக மாறுகிறது. மண்புழு உற்பத்தியும் அதிகரிக்கும்; மண்வளம் பாதுகாக்கப்படுகிறது. வாழையின் மூலம் மட்டும் மாதம் ரூ.30 ஆயிரம் வருமானம் கிடைக்கிறது. இந்த வாழையின் ஊடே சர்க்கரைவள்ளி கிழங்கு பயிரிட்டுள்ளேன். இதற்கு வேலை எதுவும் கிடையாது. தோட்டத்தில் எதையும் எரிக்க கூடாது. மட்க செய்ய வேண்டும்.
அதேபோல் 140 நாட்கள் கொண்ட பழங்கால ரகமான மிளகி நெல், சிவப்பு கவுனியை இயற்கை முறையில் விவசாயம் செய்கிறேன். 40 சென்டில் மல்லிகை பயிரிட்டுள்ளேன். விவசாயத்தால் நஷ்டம் எதுவும் கிடையாது. ஆர்வமுடன் செய்தால் அளவில்லா லாபத்தை பெறலாம், என்றார்.
பாராட்ட 73736 38810
செந்தில்குமார், காரைக்குடி


source : Dinamalar

No comments:

Post a Comment