Tuesday, April 5, 2016

ஆத்தூர், கெங்கவல்லி பகுதிகளில் கடலை பயிரில் செம்பேன் தாக்குதல்


ஆத்தூர், கெங்கவல்லி வட்டாரப் பகுதிகளில் கடலை பயிரில் செம்பேன் தாக்குதல் அதிகமாக உள்ளது.
சேலம் மாவட்டம், ஆத்தூர், கெங்கவல்லி வட்டாரப் பகுதிகளில் சுமார் ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் கடலை பயிரிடப்பட்டுள்ளது. இதில் செம்பேன் தாக்குதல் அதிகமாகக் காணப்படுவதால், இதனைக் கட்டுப்படுத்த முடியாமல் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
இதுகுறித்து ஆத்தூரில் உள்ள தனியார் அரசு அனுமதி பெற்ற வேளாண் மருந்தகம் மற்றும் மண் பரிசோதனை நிலைய வேளாண் ஆலோசகர் எம்.செல்வப்ரியா நம்மிடம் கூறியது,
கடலை பயிர்களில் செம்பேன் தாக்குதலின் அறிகுறிகள்: இலைகளில் வெண்புள்ளிகள் தோன்றி, பின் தாக்கப்பட்ட இலைகள் செம்பழுப்பு மற்றும் வெண்கல நிறமாக மாறும். இதைத் தொடர்ந்து, இலைகள் உதிர்ந்து செடிகள் வாடிவிடும்.
மிக மோசமாக தாக்கப்பட்ட செடிகளில், நூலாம்படைகளால் இலைகள் பின்னப்பட்டு பிறகு உதிர்ந்து விடும். பொதுவாக செம்பேனின் வாழ்நாள் 15 நாள்கள் தான். ஆனால், வெப்பம் அதிகமான காலநிலையில் செம்பேன் தனது வாழ்நாளை ஒரு வாரத்துக்குள் முடித்துக் கொள்ளும். வெப்ப காலநிலையில் இந்த பூச்சிகள் அதிகமான முட்டைகள் இடும்.
மே மாதத்தில் 10-ஆக இருக்கும் செம்பேன்கள், ஜூன் மாதத்துக்குள் 1,000 செம்பேன்களாக பெருகி, ஜூலை மாதத்தில் ஒரு லட்சம் அளவுக்கு பெருகிவிடும்.
இதனை டைகோபால் 2.50 மி, 1 லிட்டர் பென்பைராக்ஸிமேட், சல்பர் ஆகியவை கட்டுப்படுத்தும் திறன் கொண்டவை. மேலும், இதுகுறித்து வேளாண் ஆலோசகரிடம் ஆலோசனைப் பெற்று விவசாயிகள் பயன் பெறுமாறு கேட்டுக் கொண்டார்.

source : dinamani

No comments:

Post a Comment