Wednesday, April 20, 2016

ஆன்லைனில் விவசாய விளைபொருட்கள் விற்பனை


T
சில ஆண்டுகள் முன்புவரை வரப்புகளையும், வாய்க்கால்களையும் கொண்டு நெல், கரும்பு, வாழை என்று பணப்பயிர்களையும், மானாவாரி நிலங்களில் அதாவது மழையை நம்பி விவசாயம் செய்த இடங்களில் தானியவகைகள் என்று பயிரிட்ட விளைநிலங்கள் எல்லாம் இன்று சர்வே கல் மயமாக பொட்டல்காடாகக் காட்சியளிப்பதை எல்லா ஊர்களிலும் பார்க்கமுடிகிறது. பரம்பரை பரம்பரையாக இது எங்கள் சொந்தபூமி என்று பெருமையோடு விவசாயம் செய்துவந்த வேளாண்பெருமக்களெல்லாம், இன்று தங்கள் நிலத்தை விற்றுவிட்டு, வேறுவேலைக்கோ அல்லது வேறுவேலை தெரியாத நிலையில் தங்களுக்குத்தெரிந்த ஒரேவேலையான விவசாயத்தைப் பார்க்கும் விவசாயகூலிகளாகவோ மாறியுள்ள சோகமான நிலை நிலவிக்கொண்டிருப்பதை யாராலும் மறுத்துவிடமுடியாது. இதற்கு முக்கியக்காரணம், விவசாயம் லாபகரமானதாக இல்லை, போட்டபணம் கிடைக்காமல் கையைப்பிடித்து தொடர்ந்து கடிக்கிறது.

நெருப்பு தணல் கொண்ட குச்சியை யாரால் கையில் பிடித்துக்கொண்டு இருக்கமுடியும்?. கையைச்சுடும்போது கீழே போடவேண்டிய நிலைதானே ஏற்படும்?. அதேபோலத்தான், ஆண்டுதோறும் நஷ்டம் ஏற்பட்டுக்கொண்டே இருந்தால் எப்படி விவசாயத்தை தொடர்ந்து மேற்கொள்ளமுடியும் என்று விவசாயிகள் கேட்பதிலும் நியாயம் இருக்கிறது. அப்படி தொடர்ந்து நஷ்டம் ஏற்படுவதற்கு காரணம் என்ன என்று பார்த்தால், மழை பொய்த்துப்போவது என்பது ஒரு காரணமாக இருந்தாலும், விதை, உரம், பூச்சிமருந்து, விவசாய பணிகளுக்கான சம்பளம் போன்ற பல செலவுகள் உயர்ந்துகொண்டிருக்கும் நிலையில், அதற்கு ஈடுகட்டும் வகையில் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்காமல் இருப்பதுதான் முக்கிய காரணம். எல்லா பொருட்களுக்கும் உற்பத்தி செய்பவர்களே விலையை நிர்ணயிக்கும்போது, விவசாயிகள் மட்டும் தான் விளைவிக்கும் பொருட்களுக்கு அவர்களே விலையை நிர்ணயிக்க முடியவில்லை. இடைத்தரகர்களும், அந்த விளைபொருட்களை வாங்குபவர்களும் என்னவிலையை சொல்கிறார்களோ, அந்த விலைக்குத்தான் விற்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். அதிலும் அழுகும்பொருட்களாக இருந்தால் வேறுவழியே இருக்காது. சிலநேரங்களில் விளைநிலங்களில் இருந்து வண்டியைக் கட்டிக்கொண்டோ, வேன், லாரியிலோ, மண்டி அல்லது சந்தை அல்லது மொத்தவியாபாரிகளிடம் எடுத்துக்கொண்டு செல்லும் நிலையில் அவர்கள் கேட்கும் விலைக்குத்தான் கண்டிப்பாக விற்கவேண்டிய நிர்ப்பந்தத்துக்கு ஆளாகிறார்கள்.

இப்படிப்பட்ட நிலையில் இருந்து விவசாயிகளைக் காப்பாற்றி, கட்டுப்படியான விலைகிடைக்க வேளாண் விளைபொருட்களை ஆன்லைன் மூலம் விற்கும் புதியமுறையை அறிமுகப்படுத்தியதன் மூலம், விவசாய புரட்சிக்கு பிரதமர் நரேந்திரமோடி வித்திட்டுள்ளார். இதற்காக தேசிய வேளாண் சந்தை இணையதளம் அதாவது ‘ஈ–நம்’ என்ற பெயரில் ஒரு இணையதளத்தை தொடங்கியுள்ளார். இந்த இணையதளம் மூலம் விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை எந்த விலைக்கு?, எங்கு?, எப்போது? விற்கலாம் என்பதை அறிந்துகொள்ளலாம். எப்படி என்றால், மொத்தவிற்பனை மண்டிகளுக்கும், விவசாயிகளுக்கும் இணையதளம் மூலம் நேரடிதொடர்பு ஏற்பட்டுவிடும். தங்களுக்குத் தேவையான விளைபொருட்களை வாங்க மண்டியில் உள்ள வியாபாரிகளும், விவசாயிகளோடு நேரடி தொடர்புகொள்ளலாம். இதன்மூலம் இடைத்தரகர்களுக்கு வேலை இருக்காது. யார் தனக்கு கட்டுப்படியான விலையைக் கொடுக்கத்தயாராக இருக்கிறார்களோ, அவர்களுக்கே விவசாயியால் தான் விளைவித்த பொருட்களை விற்பனை செய்யமுடியும்.

அப்படி ஆன்லைன் மூலம் விவசாயிகள் விற்பனை செய்யவேண்டுமென்றால், வேளாண் விளைபொருள் விற்பனை குழு சட்டத்தில் திருத்தம் கொண்டுவரவேண்டும். அந்த வகையில், தற்போது 14 மாநிலங்களில்தான் இப்படி ஆன்லைன் வர்த்தகத்தை மேற்கொள்ள முடியும். தமிழ்நாட்டிலும் இந்த முறையை செயல்படுத்த வேண்டுமானால், சில சட்டத்திருத்தங்கள் கொண்டுவரப்படவேண்டும். எனவே, தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சி அமைக்கும் அரசு, விவசாயிகள் மற்றும் விவசாய விளைபொருட்களை வாங்குபவர்களுடன் கலந்து பேசி சட்டத்தில் திருத்தம் கொண்டுவரவேண்டும். இவ்வாறு ஆன்லைன் முறையை மிகச்சிறிய குறு விவசாயிகளும் பயன்படுத்த தமிழ்நாட்டில் உள்ள 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மின்ஆளுமை சேவை மையங்கள் நிச்சயமாக உதவியாக இருக்கும்.

Source : Dailythanthi

No comments:

Post a Comment