Saturday, June 18, 2016

ஹெக்டேருக்கு 6 டன் மகசூல் தரும் டிகேஎம் 13 நெல் ரகம்


திருவள்ளூர்: தற்போதைய பருவத்தில் டிகேஎம் 13 ரக நெல்லைப் பயிரிட்டால் ஹெக்டேருக்கு 6 டன் மகசூல் கிடைக்கும் என்று, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தினர் அறிவித்துள்ளனர்.
இதுகுறித்து நெல் ஆராய்ச்சி நிலையம் வெளியிட்டசெய்திக்குறிப்பு:
திருவள்ளூரை அடுத்த திரூரில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் மற்றும் நெல் ஆராய்ச்சி நிலையம் இயங்கி வருகிறது.
இந்த நிலையத்தில் கடந்த 2015-ம் ஆண்டு டிகேஎம் 13 என்ற நெல் ரகம் வெளியிடப்பட்டது. இந்த ரகமானது பிபிடி 5,204 ரகத்துக்கு மாற்று ரகமாகும். இதன் வயது 130 நாள்களாகும்.
இது காவிரி டெல்டா பகுதியில் தாளடிப் பட்டத்துக்கும் (செப்டம்பர் விதைப்பு) இதர மாவட்டங்களுக்கு சம்பா பட்டத்துக்கும் (ஆகஸ்ட்- செப்டம்பர்) விதைப்பு ஏற்றது.
இது ஹெக்டேருக்கு 5,938 கிலோ மகசூல் கொடுக்க வல்லது. மத்திம, சன்ன ரக வெள்ளை அரிசியைக் கொண்டது. அதிக அரைவைத்திறன், முழு அரிசி காணும் திறன், சிறந்த சமையல் பண்புகளுடன், நல்ல சுவையும் கொண்டது இந்த நெல்.
இது இலைச் சுருட்டுப்புழு, குருத்துப்பூச்சி, பச்சை தத்துப்பூச்சி, குலைநோய், செம்புள்ளி நோய், இலை உறை அழுகல் நோய்களுக்கு நடுத்தர எதிர்ப்புத்திறன் கொண்டது. நெல்கதிர் சாயாத தன்மை கொண்டது.
இந்த டிகேஎம் 13 நெல் ரகத்தின் விதையானது திரூர், நெல் ஆராய்ச்சி நிலையத்தில் 4 டன் இருப்பு உள்ளது. இதன் விலை கிலோ ரூ. 30 ஆகும். ஐýலை முதல் வாரத்திலிருந்து விதை விநியோகிக்கப்பட உள்ளது.
விதை நெல் தேவைப்படுவோர், திரூர், நெல் ஆராய்ச்சி நிலையத்தை நேரிலோ அல்லது 044-2762 0233 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.

source : dinamani

No comments:

Post a Comment