Friday, June 24, 2016

இயற்கை விவசாயத்தில் முட்டைக்கோஸ், காலிபிளவர் : சாதனை படைக்கும் பெண்

குளிர்பிரதேசங்களில் மட்டுமே வளரும் முட்டைகோஸ், காலிபிளவர் வறண்ட பகுதியிலும், மொட்டை மாடியில் நிழல் வலை மூலம் வளர வைக்க முடியும் என்பதை நிரூபித்து வருகிறார், தேவகோட்டை மாரிச்சான்பட்டி சேர்ந்த அமுதாராணி.
எப்போதும் ஈரப்பதம் நிறைந்த குளிர் பிரதேசங்களில் வளரும் காய்கறிகளில் முக்கியமானது முட்டைகோஸ், காலி பிளவர். ஆர்வமும், உழைப்பும் இருந்தால் ஆப்பிள் கூட நம் ஊரில் விளையும் என்கிறார், மாடி தோட்டத்தில் சாதனை படைத்து வரும் தேவகோட்டை அமுதாராணி. 
காரைக்குடி குன்றக்குடி வேளாண் அறிவியல் நிலையம் சார்பில் நடந்த பயிர் காப்பீடு குறித்த கருத்தரங்கில் அவர் கூறியதாவது: தற்போதைய அவசர உலகில் உணவு பொருட்களின் தேவை அதிகரித்து விட்டது. இயற்கையாக விளைந்த காய்கறிகள், ரசாயன உரத்தால் நச்சாக மாறி வருகிறது. உணவுக்காக உழைக்கும் மனிதன் வரும் காலத்தில் உயிருக்காக போராடும் நிலை ஏற்படும். எனவே, நமக்கு தேவையான உணவு பொருட்களை நாமே தயார் செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். 
500 சதுர அடி பரப்பில் மாடித்தோட்டம் அமைத்தேன். இதில் நிழல் வலையும் அமைத்துள்ளேன். காலி பிளவர், முட்டைகோஸ், கத்தரி, வெண்டை, மிளகாய், தக்காளி என வீட்டுக்கு தேவையான பல்வேறு வகை காய்கறிகளை பயிரிட்டுள்ளேன். 10 கிலோ கொள்ளளவு கொண்ட தார்பாலின் பாக்கெட்டில், எட்டுகிலோ பேக்கிங்கில் மண், தேங்காய்நார், அசோஸ் பைரில்லம், மட்கிய குப்பை, கரம்பை மண் ஆகியவற்றை இட வேண்டும். குழித்தட்டு முறையில் விளைவித்த 20 நாளான நாற்றுகளை அதில் நட வேண்டும். 120 நாளில் முட்டைகோஸ், காலி பிளவர் பலன் தரும். இயற்கை பூச்சி விரட்டிகளான கற்றாழை சாறு, பூண்டு கரைசல் ஆகியவற்றை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 30 மி.லி., எடுத்து தெளித்து வர நன்மை தரும் பூச்சிகள் பெருகும். வருமானம் என்பதை விட இயற்கை முறையில் விளைவித்த காய்கறிகளை உண்டு மகிழலாம். மாடி தோட்டம் கேட்போருக்கு அமைத்து தருகிறேன் என்றார்.
இவரை தொடர்பு கொள்ள: 97501 92645.--------

No comments:

Post a Comment