Tuesday, June 21, 2016

திருந்திய நெல் சாகுபடியில் பாய் நாற்றங்கால் முறையை பின்பற்றினால் அதிக மகசூல் விவசாயிகளுக்கு யோசனை

திருந்திய நெல் சாகுபடியில் பாய் நாற்றங்கால் முறையை பின்பற்றினால் அதிக மகசூல் பெறலாம் என்று விவசாயிகளுக்கு யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது. தஞ்சை மாவட்டத்தில் குறுவை சாகுபடிக்கான நாற்றங்கால் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. இந்த நேரத்தில் நெல் சாகுபடியில் அதிக மகசூலை தரக்கூடிய இயந்திரம் மூலம் நெல் நடவு சாகுபடி முறைக்கு இளம்நாற்றுக்களை தயார் செய்வது முக்கியமான தொழில் நுட்பமாகும். 

பாய்நாற்றங்கால் முறை: 14 நாட்களில் வாளிப்பான நாற்றுக்களை பெற திருத்தி அமைக்கப்பட்ட பாய் நாற்றங்கால் அமைக்க வேண்டும். இதற்கு நல்ல வடிகால் வசதியுடன் நீர் ஆதாரத்துக்கு அருகில் நாற்றங்காலை அமைக்க வேண்டும். ஒரு ஏக்கர் நடவு செய்ய தேவையான 10 கிலோ விதையை 40 சதுரமீட்டர் பரப்பு நாற்றங்காலில் விதைக்க வேண்டும். அதற்கு முன்னதாக ஒரு மீட்டர் அகலம், 40 மீட்டர் நீளம், 5 சென்டி மீட்டர் உயரம் கொண்ட மேட்டு பாத்தியின்மேல் பாலித்தீன் விரிப்பை விரிக்க வேண்டும். 

நீளம் மற்றும் அகல வாக்கில் 4 கட்டங்களாக பிரித்து ஒரு மீட்டர் நீளம், 0.5 மீட்டர் அகலம், 4 சென்டி மீட்டர் உயரம் கொண்ட மரத்திலான விதைப்பு சட்டத்தை தயார் செய்து பாலித்தீன் விரிப்புக்குமேல் சரியாக சமன்பட வைக்க வேண்டும். ஒரு கிலோ வளமான மணலுடன் அரை கிலோ நன்கு பொடியாக்கிய டிஏபி உரத்தை சேர்த்து விதைப்பு சட்டத்துக்குள் முக்கால் அளவுக்கு நிரப்ப வேண்டும். 

விதை நேரத்தி: விதை நேரத்தி செய்ய ஒரு கிலோ விதைக்கு சூடோமோனாஸ் 10 கிரோம் மற்றும் அசோஸ்பைரில்லம் மற்றும் பாஸ்போ பாக்டீரியா உயிர் உரம் தலா ஒரு பாக்கெட் (200 கிராம்) என்ற அளவில் பயன்படுத்த வேண்டும். சூடோமோனாஸ் அசோஸ்பைரில்லம் மற்றும் பாஸ்போ பாக்டீரியாவை தேவையான அளவு அரிசிக்கஞ்சி அல்லது தண்ணீரில் கரைத்து பின் அவற்றை விதைகளுடன் நன்றாக கலந்து நிழலில் உலர்ந்த வேண்டும். நிழலில் உலர்த்திய விதைகளை தண்ணீரில் ஊறவைத்து வடிக்கட்டி பின் (24 மணி நேரம்) முளை கட்ட வேண்டும்.

விதைத்தல்: விதையை முளை கட்டிய பரவலாக விதைக்க வேண்டும். பின்னர் பூவாளியால் அடி வரை நனையும் வரை அளவுக்கு தண்ணீர் தெளிக்க வேண்டும். விதையை விதைத்த பின் தென்னை ஓலை அல்லது வைக்கோல் கொண்டு விதைத்த பாத்திகளை மூடி விட்டு 7 நாள் கழித்து தென்னை ஓலை அல்லது வைக்கோலை நீக்க வேண்டும்.

நீர்பாசனம்: முதல் 5 நாட்கள் வரை பூவாளியால் தண்ணீர் தெளித்து பின்னர் பாத்திகளை நனையும் வகையில் தண்ணீர் கட்ட வேண்டும். விதைத்த 9வது நாள் 0.5 சதவீத யூரியா கரைச்சலை பூவாளி மூலம் மாலை நேரத்தில் தெளிக்க வேண்டும். சரியாக 14வது நாளில் 12 முதல் 16 சென்டிமீட்டர் உயரமுடைய 2 கிலோ இலை கொண்ட வாளிப்பான இளம் நாற்றங்கால் நடவுக்கு தயார் நிலையில் இருக்கும். இதேபோல் விவசாயிகள் மேற்கண்ட தொழில்நுட்பங்களை பின்பற்றி அதிக அளவிலான மகசூலை பெறலாம். இவ்வாறு தஞ்சை மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
Source : Dinakaran

No comments:

Post a Comment