Thursday, July 28, 2016

கண் எரிச்சலை போக்கும் கொத்தமல்லி



வெப்பத்தால் கண் எரிச்சல், கண்களில் சிவப்பு தன்மை உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படும். இதை முள்ளங்கி, தக்காளி, வெள்ளரி, கொத்தமல்லி போன்றவற்றை பயன்படுத்தி சரிசெய்யும் மருத்துவத்தை காணலாம். முள்ளங்கியை பயன்படுத்தி கண் எரிச்சலுக்கான மருந்து தயாரிக்கலாம்.

தேவையான பொருட்கள்: முள்ளங்கி, தக்காளி, வெள்ளரி, சீரகப்பொடி, உப்பு. கால் டம்ளர் முள்ளங்கி சாறு, சம அளவு தக்காளி சாறு மற்றும் வெள்ளரி சாறுடன் கால் ஸ்பூன் சீரகப் பொடி, சிறிது உப்பு ஆகியவற்றை சேர்த்து கலந்து வாரம் இருமுறை குடித்து வந்தால் கண் எரிச்சல், கண்ணில் ஏற்படும் சிவப்பு தன்மை, சிறுநீர் பாதையில் ஏற்படும் எரிச்சல் சரியாகும். உள் உறுப்புகளில் ஏற்படும் அழற்சி குணமாகும். உடல் குளிர்ச்சி அடையும்.

நந்தியா வட்டை பூக்களை பயன்படுத்தி கண் எரிச்சலை போக்கும் மருந்து தயாரிக்கலாம்.  நந்தியா வட்டை பூக்களை இரவு நேரத்தில் தண்ணீரில் ஊற வைக்கவும். இந்த தண்ணீரை கொண்டு கண்களை கழுவினால் கண் எரிச்சல் சரியாகும். பூக்களை கண்களின் மேல் வைத்து 15 நிமிடம் கட்டி வைத்தால், கண் சோர்வு, கண் எரிச்சல் குணமாகும். வெயிலில் செல்லும்போது கண்கள் சிவந்து போகும்.

இந்நிலையில், நந்தியா வட்டை பூக்கள் உடலில் ஏற்படும் உஷ்ணத்தை குறைப்பதால் கண் பிரச்னைகள் சரியாகும். கண்களில் அழுக்கு படிதலை தடுப்பதுடன், கண்களுக்கு ஆரோக்கியம் தரும். பார்வையை தெளிவுபடுத்தும். திரிபலா சூரணத்தை பயன்படுத்தி கண் எரிச்சலை போக்கும் மருந்து தயாரிக்கலாம். ஒரு ஸ்பூன் திரிபலா சூரணத்தில் நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதை நன்றாக ஆற வைத்து, 2 முறை வடிக்கட்டி எடுத்து கொள்ளவும். இந்த நீரை கொண்டு கண்கள், புண்கள், கொப்புளங்களை கழுவுவதால் அவைகள் வெகு விரைவாக ஆறும்.

கொத்தமல்லி இலைகளை சுத்தப்படுத்தி அரைத்து சாறு எடுக்கவும். மெல்லிய துணியில் இந்த சாறை நனைத்து கண்களுக்கு மேல் ஒத்தடம் கொடுக்கலாம் அல்லது கண்கள் மீது 15 நிமிடங்கள் வைத்திருந்தால் கண் எரிச்சல் சரியாகும். இதேபோன்று, வில்வ இலை சாறு எடுத்து கண்களில் வைத்தால் கண் எரிச்சல் குணமாகும்.

வெயிலின் தாக்கம் அதிகம் உள்ள நிலையில், புறவூதா கதிர்கள் அதிகளவில் தாக்குவதால் கண்கள் பாதிக்கும். கண்களில் சிவப்பு தன்மை, கண் எரிச்சல், கிருமிகள் தொற்று போன்றவை நிகழும். இந்நிலையில் கொத்தமல்லி, வில்வ இலை சாறு மருந்தாகிறது. இதுபோன்ற எளிய மருத்துவத்தை பயன்படுத்துவதன் மூலம் கண்களை நாம் பாதுகாக்கலாம்.

Source : Dinakaran

No comments:

Post a Comment