Tuesday, July 19, 2016

வெள்ளைபோக்கு பிரச்னையை தீர்க்கும் மாதுளை



வெள்ளைப்போக்கால் பெண்களுக்கு உடல் சோர்வு ஏற்படும். மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். உடல் வலி, இடுப்பு வலி, வயிற்று வலி, கன்னம் வற்றிப்போகுதல் போன்றவை ஏற்படுகிறது. நீண்டகாலம் இப்பிரச்னை தொடர்ந்தால், கருப்பையில் புற்றுநோய் ஏற்பட வாய்ப்புள்ளது. இப்பிரச்னைக்கு இட்லி பூ, மாதுளை ஆகியவை அற்புதமான மருந்தாகிறது.

சிவப்பு நிற இட்லி பூக்களை பயன்படுத்தி வெள்ளைப்போக்குக்கான மருந்து தயாரிக்கலாம். சிறிது இட்லி பூக்கள் எடுக்கவும். இதனுடன், அரை ஸ்பூன் பனங்கற்கண்டு சேர்த்து ஒரு டம்ளர் அளவுக்கு நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிக்கட்டி காலை, மாலை  குடித்துவர வெள்ளைபோக்கு சரியாகும். பல்வேறு நன்மைகளை கொண்ட இட்லி பூ, நுண்கிருமிகளை அழிக்க கூடியது. பூஞ்சை காளான்களை போக்க கூடியது. நோய் எதிர்ப்பு சக்தி உடையது. பாதுகாப்பானது, பக்கவிளைவுகள் இல்லாதது.

மாதுளையை பயன்படுத்தி வெள்ளைப்போக்குக்கான மருந்து தயாரிக்கலாம். மாதுளம் பழத்தின் தோல் 4 துண்டுகள் எடுத்து இடித்து எடுக்கவும். இதில், ஒரு டம்ளர் அளவுக்கு நீர்விடவும். அரை ஸ்பூன் பனங்கற்கண்டு சேர்த்து கொதிக்க வைக்கவும். வடிகட்டி பால் சேர்த்து காலை, மாலை குடித்துவர வெள்ளைப்போக்கு வெகு விரைவில் சரியாகும். உடல் வலி, உஷ்ணம் குறையும்.

மாதுளை பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டது. மாதுளை முத்துக்கள், இதய நோய்க்கு உன்னதாமான மருந்தாகிறது. எலும்புகளுக்கு பலம் கொடுக்கிறது. நோய் கிருமிகளை போக்க கூடிய தன்மை மாதுளையின் தோல் பகுதிக்கு உண்டு. மாதுளம் பழத்தின் தோலை காயவைத்து எடுத்து வைத்துக்கொண்டால் பல்வேறு நோய்களுக்கு அதை மருந்தாக பயன்படுத்தலாம்.

தக்காளியை பயன்படுத்தி வெள்ளைப்போக்கு பிரச்னைகளை தீர்க்கும் மருந்து தயாரிக்கலாம். 2 தக்காளியை பசையாக அரைத்து எடுக்கவும். இதனுடன், கால் ஸ்பூன் அதிமதுர பொடி, அரை ஸ்பூன் தேன் சேர்க்கவும். நன்றாக கலந்து தினமும் காலை நேரத்தில் சாப்பிட்டுவர வெள்ளைப்போக்கு குறையும். தக்காளி நோய் எதிர்ப்பு சக்தி உடையது. வயிற்று புண்களை ஆற்றும். கருப்பையில் புற்றுநோய் வராமல் தடுக்கிறது.

தோல்நோய் வந்தால் ஏற்படும் அரிப்பை குணப்படுத்தும் மருந்துவம் குறித்து பார்க்கலாம். நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் நன்னாரி வேர் பொடியை ஒரு ஸ்பூன் அளவுக்கு எடுக்கவும். இதை நீரில் கொதிக்க வைத்து இனிப்பு சேர்த்து குடித்துவர தோல் அரிப்பு குணமாகும். நன்னாரி வேரை கொதிக்க வைத்து, கழுவுவதன் மூலம் தோலில் ஏற்படும் அரிப்பு சரியாகும்.

Source : Dinakaran

No comments:

Post a Comment