Friday, August 12, 2016

சம்பா நடவுக்கு முன் வேளாண் அதிகாரி வழிகாட்டல் : தக்கைப்பூண்டு விதைத்தால் அதிக மகசூல் பெறலாம்

சம்பா நடவிற்கு முன் தக்கைப்பூண்டை விதைத்தால் அதிக மகசூல் பெறலாம் என்று வேளாண் அதிகாரி தெரிவித்துள்ளார். இது குறித்து தா.பழூர் வட்டார வேளாண்மை  உதவி இயக்குனர் பழனிசாமி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஒன்றியத்தில் பாசன வசதிபெறும் நிலங்களில் சம்பா நடவிற்கு 45 நாட்கள் முன்னதாக தக்கைபூண்டு (அ) சணப்பை விதைகள் விதைக்க இதுவே ஏற்ற தருணமாகும். 

இதனால் சாண எரு இடவேண்டிய அவசியமில்லை. விதைத்த 35, 45 நாட்களுக்குள் பசுந்தாளுரப் பயிர்களுடன் வயலில் சூப்பர் பாஸ்பேட் உரம் ஏக்கருக்கு 1 மூட்டை வீதம் இட்டு மடக்கி அழுத்தி 5, 7 நாட்கள் கழித்து நடவு செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் மண்ணின் வளம் மிகவும் மேம்பட்டு தரமும் உயர்கிறது. இதனால் நெல் பயிர்கள் அறுவடை வரை பசுமை மாறாமல் இருக்கும். 

நன்மை செய்யும் நுண்ணுயிர்களின் செயல்பாடும் நன்றாக இருக்கும். மேலும் தா.பழூர் வட்டாரத்தில் பாசன வசதியுடன் விவசாயிகள் நெல் சம்பா சாகுபடிக்கு 45 நாட்கள் முன்னதாக 1 எக்டருக்கு 50 கிலோ  தக்கைப்பூண்டு அல்லது சணப்பை பசுந்தாளுரப்பயிர் விதைகள் தனியார் கடைகளில் பில்லுடன் விதைகளை வாங்கி உடன் விதைத்து ஆவணங்களை அளித்தால் தேசிய வேளாண்மை வளர்ச்சித்திட்டத்தின்கீழ் 50 சத மானியத்துடன் ஒரு எக்டருக்கு ரூ.1500க்கு மிகாமல் விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். எனவே இந்த வாய்ப்பை பயன்படுத்தி விவசாயிகள் சணப்பை (அ) தக்கைப்பூண்டு விதைகள் வாங்கி விதைத்து, தங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவலரிடம் ஆவணங்களை ஒப்படைக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Source : Dinakaran

No comments:

Post a Comment