Thursday, September 22, 2016

ஆரோக்கியமான நெல் சாகுபடிக்கு சாம்பல் சத்து அவசியம்: வேளாண்மைத் துறை

ஆரோக்கியமான நெல் சாகுபடிக்கு சாம்பல் சத்து மிகவும் அவசியம் என்று வேளாண்மைத் துறை தெரிவித்துள்ளது.
 இதுகுறித்து மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் பெ.ஹரிதாஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
 விவசாயத்தில் மகசூலைப் பெருக்குவதற்கு இயற்கை உரங்களின் உபயோகத்தினைவிட, ரசாயன உரங்களின் பயன்பாடு தற்போது அதிகமாக உள்ளது.
 பயிருக்கு தழை, மணி மற்றும் சாம்பல் சத்துகள் இன்றியமையாதவை ஆகும்.
 தழைச்சத்து பயிருக்கு வளர்ச்சியையும், மணிச்சத்து வேர் வளர்ச்சிக்கும், பூக்கள் மற்றும் மணிகள் உருவாகவும், சாம்பல் சத்து பயிரின் தண்டு உறுதி, வறட்சியினை தாங்கும் சக்தி மற்றும் நோய் எதிர்ப்பு தன்மையையும் வழங்குகின்றன. தற்போது வீரிய ஒட்டு உயர் விளைச்சல் ரகங்கள் அதிகளவில் உபயோகத்தில் உள்ள சூழலில் ரசாயன உரங்களின் தேவையும் அதிகமாக உள்ளது. தழைச் சத்துகளை மட்டும் அதிகளவில் உபயோகிப்பதனால் பயிரின் வளர்ச்சி அதிகரிக்கின்றது.
 இதனால் பூச்சி மற்றும் நோய் தாக்குதல் அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது. ரசாயன உரங்களை விட விலை குறைவாக உள்ளதால், யூரியா உரம் விவசாயிகளால் பயிரின் தேவைக்கு அதிகமாக உபயோகிப்பது வழக்கத்தில் உள்ளது.
 மேலும் மணி மற்றும் சாம்பல் சத்துக்களை அளிக்கவல்ல ரசாயன உரங்களை பயிருக்கு அளிப்பதும் குறைவாக உள்ளது. பயிருக்கு தேவையான சத்துக்களை அளிக்கும் உரங்கள் சமச்சீர் அளவில் இல்லாமல் ஒன்று அல்லது இரண்டு சத்துகளை மட்டும் வழங்கும் உரங்களை இடுவதால் பூச்சி, நோய் தாக்குதல் ஏற்பட்டு பயிரின் ஆரோக்கியம் கெடுகிறது.
 நெற்பயிரின் சீரான வளர்ச்சிக்கும், பூச்சி, நோய்க்கு எதிர்ப்பு தன்மையினை அளித்தும், வறட்சியினை தாங்கும் சக்தியினை அளித்தும், பதர் ஆகாமல் நிறைந்த நெல்மணிகள் உருவாகவும் சாம்பல் சத்து கொண்ட பொட்டாஷ் அடியுரமாகவும், மேலுரமாக யூரியாவுடன் பொட்டாஷ் கலந்தும் இடவேண்டியது மிகவும் அவசியம்.
 விவசாயிகள் பயிருக்குத் தேவையான தழை, மணி மற்றும் சாம்பல் சத்துகளை தரவல்ல நேரடி உரங்களை சிபாரிசுப்படி இடவேண்டும். இல்லாவிடில் 3 சத்துகளையும் கொண்ட கூட்டு உரங்களை உபயோகிக்க வேண்டும். முன்னணி உர நிறுவனங்களின் தயாரிப்பான 15:15:15, 16:16:16 ஆகிய கூட்டு உரங்களை விவசாயிகள் பயிருக்கு இட வேண்டும்.
 இதன் ஒவ்வொரு குருணையிலும் 3 விதமான சத்துக்களும் சீரான அளவில் இருப்பதால் பயிருக்கு தேவையான சத்துகள் குறைபாடு இல்லாமல் கிடைக்கிறது.
 மேலும், ரசாயன உரங்களை பயிருக்கு அளிப்பதானது, மண் பரிசோதனை முடிவுகளின் அடிப்படையிலும், பயிர் தேவையின் அடிப்படையிலும் அமைய வேண்டும். எனவே விவசாயிகள் தழை, மணி, சாம்பல் ஆகிய 3 சத்துகளும் கொண்ட ரசாயன உரங்களை அடியுரமாக இட்டு அதிக மகசூல் பெறலாம் என அதில்
 தெரிவித்துள்ளார்.

Source : Dinamani

No comments:

Post a Comment