Saturday, September 17, 2016

பேரீச்சை மகத்துவம்


3
தினமும் பேரீச்சம் பழம் சாப்பிட ஆரம்பித்தால் உடலில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் என்று தெரியுமா? பலரும் பேரீச்சம் பழம் சாப்பிட்டால் உடலில் ரத்தத்தின் அளவு அதிகரிக்கும் என்று மட்டும் தான் நினைக்கிறார்கள். ஆனால் பேரீச்சம் பழத்தில் நாம் நினைக்க முடியாத அளவில் நன்மைகள் நிறைந்துள்ளது. அதிலும் தினமும் 3 பேரீச்சம் பழத்தை ஒருவர் உட்கொண்டு வந்தால், தற்போது பலர் சந்தித்து வரும் நிறைய பிரச்னைகளில் இருந்து விடுபடலாம். அந்த அளவில் இந்த சிறு பழத்தில் சத்துக்களானது ஏராளமான அளவில் அடங்கியுள்ளது. இங்கு தினமும் 3 பேரீச்சம் பழம் சாப்பிடுவதால் பெறும் நன்மைகள் கொடுக்கப்பட்டுள்ளது.

பேரிச்சம் பழத்தில் வளமான அளவில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளதால், தினமும் 3 பேரீச்சம் பழத்தை உட்கொண்டு வந்தால், ஒரு நாளைக்கு ஒருவருக்கு வேண்டிய ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும். குறிப்பாக காப்பர், பொட்டாசியம், நார்ச்சத்து, மாங்கனீசு, வைட்டமின் பி6, மக்னீசியம் போன்றவற்றைப் பெறலாம். பேரீச்சம் பழம் செரிமான மண்டலத்தின் ஆரோக்கியத்திற்கு நல்லது. ஒருவேளை உங்களுக்கு சீரற்ற குடலியக்கம், மலச்சிக்கல் அல்லது வேறு ஏதேனும் செரிமான பிரச்னைகள் இருப்பின், தினமும் 3 பேரீச்சம் பழத்தை உட்கொண்டு வர, அதில் உள்ள நார்ச்சத்து இப்பிரச்னைகளுக்கு தீர்வளித்து, குடல் புற்றுநோய் வரும் அபாயத்தை குறைக்கும்.

பேரீச்சம் பழத்தில் மக்னீசியம் என்னும் நோய் எதிர்ப்பு அழற்சி பொருள் உள்ளது. இது உடலினுள் ஏற்படும் வீக்கம் மற்றும் வலியைக் குறைக்கும். மேலும் ஆய்வுகளும் பேரீச்சம் பழத்தில் உள்ள மக்னீசியம், தமனிகளில் ஏற்படும் வீக்கத்தைக் குறைத்து, இதய நோய்கள் வரும் அபாயத்தை குறைப்பதாக கூறுகின்றன. பேரீச்சம் பழத்தில் உள்ள மக்னீசியம், உயர் ரத்த அழுத்தத்தை குறைக்க உதவியாக இருக்கும். மேலும் இதில் உள்ள பொட்டாசியம், இதய செயல்பாட்டை மென்மையாக்கி, ரத்த அழுத்தத்தை சீராக வைத்துக் கொள்ளும். எனவே உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்கள், தினமும் 3 பேரீச்சம் பழம் சாப்பிட்டு வந்தால், ரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளலாம்.

முக்கியமாக பேரீச்சம் பழத்தில் இருக்கும் மக்னீசியம் பக்கவாதம் வரும் அபாயத்தைக் குறைப்பதாக ஏழு ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது. அதற்கு தினமும் ஒருவர் 100 மிகி மக்னீசியத்தை எடுக்க வேண்டியது அவசியம். யார் ஒருவர் தினமும் 3 பேரீச்சம் பழத்தை உட்கொண்டு வருகிறாரோ, அவரது மூளையின் செயல்பாடு மேம்படும். அதாவது ஞாபக சக்தி, ஒருமுகப்படுத்தும் தன்மை, கூர்மையான புத்தி, எதையும் எளிதில் கற்றுக் கொள்ளும் திறன் போன்றவை அதிகரிக்கும். பேரீச்சம் பழத்தில் உள்ள அதிகப்படியான இரும்புச்சத்து, உடலில் ரத்த அணுக்களின் அளவை அதிகரித்து, ரத்த சோகை வரும் அபாயத்தை குறைக்கும். எனவே உங்கள் உடலில் ரத்தத்தின் அளவு சீராக இருக்க, தினமும் 3 பேரீச்சம் பழத்தை உட்கொண்டு வாருங்கள்.

Source : Dinakaran

No comments:

Post a Comment