Tuesday, July 25, 2017

நிரந்தர வேளாண் கலாசாரப் பண்ணை: விவசாயி பாமயனின் பன்முகம்


மதுரையில் திருமங்கலம், டி.கல்லுப்பட்டி, கள்ளிக்குடி உள்ளிட்ட பகுதிகளில் பருத்தி மற்றும் சிறுதானியங்கள் சாகுபடி மானாவாரியாக நடக்கிறது. 
தண்ணீர் பஞ்சம் மிகுந்த இப்பகுதியில் விவசாயத்தில் சாதனை படைப்பது சாதாரண காரியமல்ல. தன்னம்பிக்கை, விடாமுயற்சி, உழைப்பை மூலதனமாக கொண்டு விவசாயத்தில் சாதனை படைத்து வருகிறார் இயற்கை விவசாயி பாமயன். திருமங்கலம் - டி.கல்லுப்பட்டி ரோட்டில் சோலைப்பட்டி விலக்கில் 'நிரந்த வேளாண் கலாச்சாரப் பண்ணை' (பெர்மனன்ட் அக்ரி கல்சர் பார்ம்) நடத்தி வருகிறார். இங்கு சுட்டெரிக்கும் வெயிலில் சொட்டு நீர் கூட உடனே ஆவியாகி விடும். உப்புச்சுவை மிக்க நீரில் இயற்கை விவசாயம் செய்வதற்காக உப்புச்சுவையை இயற்கை முறையில் மாற்றி தினமும் பயன் படுத்துகிறார் பாமயன்.இது எப்படி சாத்தியம் என்பது குறித்து பாமயன் கூறியதாவது: நிரந்த வேளாண் கலாசாரப் பண்ணையை உருவாக்குவதற்காக 
6 அடி ஆழம், 40 அடி அகலத்தில் மண் தொட்டி அமைத்தேன். அதில் பாலிதீன் பாய் விரித்து 194 லட்சம் லிட்டர் உப்பு நீர் தேக்கினேன். 
உப்புச்சுவை மற்றும் தண்ணீர் சத்துள்ளதாக (அமிலோ ஆசிட் வாட்டர்) மாற்றுவதற்காக தலா 400 எண்ணிக்கையில் ஜிலேபி கெண்டை, கட்லா, புது கெண்டை, விரால் மீன் குஞ்சுகளை தொட்டியில் விட்டுள்ளேன். மீன் குஞ்சுகளின் கழிவுகள் தண்ணீரை சத்துள்ளதாக மாற்றி விடுகிறது. அந்த தண்ணீரை வயல்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை பாய்ச்சுகிறேன். மீண்டும் தொட்டியில் தண்ணீர் நிரப்புகிறேன். தொட்டியில் இருந்து மோட்டார் மூலம் தண்ணீர் எடுத்து மண் இல்லாத உணவு தானியங்கள் வளர்த்து வருகிறேன். தொட்டி அமைக்க 70 ஆயிரம் ரூபாய் செலவானது. அவரவர் வசதிக்கேற்ப குறைந்த செலவிலும் தொட்டி அமைக்கலாம். நிரந்தர வேளாண் கலாசாரப் பண்ணை என்பது மீன் கழிவு நீரில் விவசாயம், மாட்டுச்சாணத்தில் மண்புழு உரம், மீன்களுக்கு உணவாகும் மண்புழு, மீன் வளர்ப்பில் லாபம் என ஒருங்கிணைந்த இயற்கை விவசாயத்தை குறிக்கும் என்றார்.
தொடர்புக்கு 98420 48317.
- கா.சுப்பிரமணியன், மதுரை.

Source : Dinamalar

பருத்தியை காயப்படுத்தும் அமெரிக்கன் காய்ப்புழு

பருத்தி பயிரில் அமெரிக்கன் காய்ப்புழு எனும் பச்சைக் காய்ப்புழுவின் தாக்குதல் ஏற்பட்டுள்ளதா என விவசாயிகள் கண்காணிக்க வேண்டும். இத் தாக்குதலுக்கு உள்ளான பூ மொட்டுகள் விரிந்து பின்னர் விழுந்து விடும். பாதித்த பகுதிகளில் வட்ட வடிவமான துளை காணப்படும். துளைகள் எச்சத்தினால் அடைக்கப்படாமல் சுத்தமாக காணப்படும். துளையின் கீழ் உள்ள புல்லி வட்ட இதழ்களில் புழு வெளியேற்றிய கழிவுகளை காணலாம். தழைச்சத்து உரம் அதிகப்பட்டு செழித்து அடர்ந்து வளர்ந்த பயிரில் அமெரிக்கன் காய்ப்புழுத்தாக்குதல் அதிகமாக இருக்கும். அமெரிக்கன் காய்ப்புழுவினை கட்டுப்படுத்த புரோபினோபாஸ் (2 மில்லி / ஒரு லிட்டர் தண்ணீர்) அல்லது ஸ்பின்னோசாடு (0.5 மில்லி / ஒரு லிட்டர் தண்ணீர்) மருந்தினை பயன்படுத்தலாம். பயிரின் வளர்ச்சியினை பொறுத்து ஏக்கருக்கு 200 முதல் 300 லிட்டர் வரை மருந்து கரைசல் தேவைப்படும். மருந்து கரைசல் பயிரில் நன்கு படிவதற்காக சாண்டோவிட், இன்ட்ரான், ஸ்டிக்கால் ஆகிய திரவ சோப்புகளில் ஏதேனும் ஒன்றினை ஒரு லிட்டர் மருந்து கரைசலுக்கு கால் மில்லி வீதம் சேர்த்து கலக்கி கொண்டு மாலை நேரத்தில் மருந்து தெளிக்கலாம். இதனால் புழு நல்ல முறையில் கட்டுப்படுவதோடு, நன்மை தரும் 
பூச்சிகள் பாதுகாக்கப்படும்.
முனைவர் ம.குணசேகரன்
தலைவர், பருத்தி ஆராய்ச்சி நிலையம்
ஸ்ரீவில்லிபுத்துார்.

Source : Dinamalar

50 சென்ட் நிலத்தில் சம்பங்கி பூ: ஏக்கருக்கு ரூ.2 லட்சம் லாபம்


பிள்ளை போல் வெள்ளை நிறத்தில் சிரிக்கும் சம்பங்கிப் பூக்கள் தான் என்னை ஜெயிக்க வைக்கிறது,'' என்கிறார், திண்டுக்கல் புதுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கலைசெல்வன். இரண்டு ஏக்கர் நிலம் இருந்தாலும் 50 சென்ட் பரப்பளவில் நில மூடாக்கு முறையில் சம்பங்கி பயிரிட்டுள்ளார். 2 முதல் 3 ஆண்டுகளுக்கு உயிர் தரும் இப்பயிரின் மகத்துவம் குறித்து கலைசெல்வன் கூறியதாவது: ஒரு ஏக்கருக்கு 150 கிலோ நில மூடாக்கு சீட் வேண்டும். இந்த சீட் கிலோ 230 ரூபாய் முதல் 250 ரூபாய் வரை செலவாகும். நீளப்பாய் போன்று இருக்கும் இதன் நடுவில் துளையிட்டு சம்பங்கி கிழங்கு நடவேண்டும். ஏக்கருக்கு 800 - 900 கிலோ கிழங்கு தேவைப்படும்.சொட்டு நீர்ப்பாசனத்தின் மூலம் 16 அடி இடைவெளியில் 'ஸ்பிரிங்ளர்' முறையில் தண்ணீரை தெளிக்கலாம்.15 நாட்களில் முளை வந்து விடும். 65 முதல் 90 நாட்களில் பூ வர ஆரம்பிக்கும். ஏக்கருக்குஅதிகபட்சமாக 60 கிலோ பூக்கள் கிடைக்கும். சூழ்நிலையைப் பொறுத்து 3 நாட்களுக்கு ஒருமுறை நீர் பாய்ச்சினால் போதும். 5 மாதங்களுக்கு பிறகு பூக்கள் தினமும் கிடைக்கும். காலை வேளையில் மார்க்கெட்டிற்கு பூ அனுப்புவது நல்லது.அதிகாலை 4:00 மணிக்கு பூ எடுக்கலாம். காலையில் பூக்கும் பூ வெள்ளையாக பளிச்சென்று இருக்கும். பூக்களை பறித்து தண்ணீரில் லேசாக நனைத்து கட்டி வைத்து திண்டுக்கல் மார்க்கெட்டிற்கு அனுப்புவேன். ஒரு நபர் ஒரு மணிநேரத்தில் 10 கிலோ பூக்கள் பறிக்கலாம். வைகாசி, ஆனியில் கிலோ 500 ரூபாய் வரை விலை கிடைக்கும். சீசன் இல்லாத நேரத்தில் கிலோ 20 ரூபாய் தான். ஆண்டுக்கு 52 முகூர்த்தங்கள் மூலம் லாபம் இருப்பதால், ஏக்கருக்கு சராசரியாக 2 லட்ச ரூபாய் லாபம் கிடைக்கும். என்றார். 
தொடர்புக்கு: 97877 87432
எம்.எம்.ஜெயலெட்சுமி மதுரை.

Source : Dinamalar

மண் பரிசோதனை செய்வது எப்படி: தோட்டக்கலை அலுவலகம் விளக்கம்

மண் பரிசோதனை மூலம் விவசாயம் செய்தால் அதிக மகசூல் பெறலாம். இதற்கு முன் பரிசோதனைக்காக மண்ணை எவ்வாறு சேகரிப்பது என, தோடக்கலை துறை அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர். தோட்டக் கலைத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: மண் பரிசோதனை மட்டுமின்றி, தண்ணீர் பரிசோதனையும் அவசியமாகும். மண் பரிசோதனை செய்வதற்கு எப்படி மண் சேகரிக்க வேண்டும் என்பது முக்கியமாகும். மண்ணை தொடர்ந்து பயன்படுத்தி அதில் உள்ள பயன்களை அனுபவிக்க வேண்டும் என்றால், மண்ணை ஆய்வக பரிசோதனைக்கு உட்படுத்தி, பரிசோதனை முடிவுகளுக்கு ஏற்றவாறு விவசாயிகள் சாகுபடி செய்ய வேண்டும்.

சாகுபடி செய்வதற்கு முன்னர் நாம் சாகுபடி செய்யும் நிலத்தின் மண்ணில் உள்ள சத்துக்கள், குறைபாடு உள்ள சத்துக்கள் எவை என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். ரசாயன உரங்கள், குப்பை, பூச்சிக்கொல்லி மருந்துகள் இடப்பட்ட இடங்களில் மண் மாதிரிகள் எடுக்க கூடாது.
மேலும் வரப்பு, கிணறு பகுதி, நீர்வடியும் பகுதி மற்றும் நிரந்தரமாக நிழல்படும் இடங்களிலும் மண் மாதிரிகள் எடுக்க கூடாது. நிலம் தரிசாக இருக்கும் காலத்தில் மண் மாதிரி எடுக்கலாம். 'வி' வடிவத்தில் வெட்டி உட்புற மண்ணை எடுக்காமல் இருபக்கமும் சுரண்டி எடுக்க வேண்டும். ஒரு ஏக்கருக்கு 4 முதல் 7 இடங்களில் மண் மாதிரி எடுக்கலாம்.



சேகரிக்கப்பட்ட மண் மாதிரிகளை நிழலில் உலர்த்தி அரை கிலோ மண்ணை ஆய்வகத்திற்கு கொடுக்க வேண்டும். அவ்வாறு கொடுக்கும் பட்சத்தில் மாவட்ட மண் பரிசோதனை மையத்தில் மண் பரிசோதனை செய்யப்பட்டு, உங்களின் நிலத்தின் தன்மை குறித்த விரிவான தகவல்களை அளிப்பர். அதற்கு ஏற்றவாறு சாகுபடி முறை, உரம் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்து பயன்படுத்தலாம். இதனால் கூடுதல் மகசூல், நோய் தாக்காமல் இருக்கும், என்றார்.

Source : Dinamalar

Friday, July 21, 2017

நிழல் வலை கூடாரம்


நிழல் வலை கூடாரமானது மரம் அல்லது இரும்பு சட்டம் மூலம் வடிவமைக்கப்பட்டு மரம், இரும்பு, துகள் துாண்களை கொண்டு கட்டப்படுகிறது. இந்த நிழல் வலை கூடாரம், பிளாஸ்டிக் வலையினை கொண்டு மூடப்படுகிறது. 
நிகழ் வலை கூடாரமானது வெளிச்சம் மற்றும் வெப்பத்தினை பாதியாக குறைப்பதன் மூலம் வளிமண்டல வெப்பத்தினை குறைத்து பயிர்களுக்கு தேவையான தட்பவெப்ப நிலையை தருவதன் மூலம் காய்கறிப் பயிர்களை இடை பருவத்திலும் மற்றும் ஆண்டு முழுவதும் பயிரிடலாம்.
நிழல் வலைகள் வளி மண்டல வெளிச்சத்தினை பாதியாக குறைத்து, நிழல் வலை கூடாரம் முழுவதும் சமமாக பகிர்ந்தளிக்கிறது. ஒவ்வொரு தாவரத்திற்கும், அதன் வளர்ச்சிக்கும் நிழல் மற்றும் வெப்பம் தேவைப்படுகிறது. அதனை பூர்த்தி செய்யும் விதமாக நிழல் வலைக்கூடாரம் செயல்படுவதால், இவை வரவேற்பை பெற்றுள்ளது. 
பயிர்களுக்கு தகுந்த வளர் ஊடகத்தினை உருவாக்குவதற்கு சரியான விகிதத்தில் நிழல் வலைகளை தேர்வு செய்வதன் மூலம் பயிர்களின் உற்பத்தி திறன் மற்றும் தரத்தினை மேம்படுத்தலாம். 
நிழல் வலை கூடாரத்தினால் பயிர்களின் ஒளிச்சேர்க்கை செய்யும் திறன் மேம்படுத்தப்படுகிறது. மேலும் மண், காற்று மற்றும் பயிர் இலைகளின் வெப்பநிலை குறைத்து மிதமான அளவுகளில் கிடைக்கப்பெறுவதால் பயிர்களின் வளர்ச்சி துாண்டப்பட்டு உற்பத்தித்திறன் மேம்படுத்தப்படுகிறது.
டி.யுவராஜ் வேளாண் பொறியாளர்
உடுமலை. 94865 85997


Source : Dinamalar

Thursday, July 20, 2017

பயிர்களை காக்கும் பூச்சிகள்

பூச்சிகளை கட்டுப்படுத்த ரசாயனங்களை பயன்படுத்துவதை தவிர்த்து பயிர்களை பாதுகாக்கும் பூச்சிகளை பயன்படுத்தி, அழிக்கும் பூச்சிகளை ஒழிக்க வேண்டும். பூச்சிகளை தாக்கும் தன்மைக்கேற்ப இயற்கை எதிரிகளை ஒட்டுயிர், ஒட்டுண்ணி, இரை விழுங்கிகள் என வகைப்படுத்தலாம்.

ஒட்டுயிர்
வேறு ஒரு உயிரை சார்ந்து வாழ்வது. தங்கியிருக்கும் இடத்திற்கு தீங்கு விளைவிக்காமல் தனது நிலைப்பு தன்மைக்காக மற்ற உயிரினத்தை சார்ந்திருக்கும்.

ஓட்டுண்ணி
வேறு ஒரு உயிரினத்தை சார்ந்து வாழ்வது. தான் சார்ந்த இனத்தை அழித்து வாழும். 

இரை விழுங்கி
வேறு ஒரு உயிரை வேட்டையாடி உண்பவை இரை விழுங்கிகள்.

காண்டாமிருக நாவாய்ப்பூச்சி
சோயா பீன்ஸ், நிலக்கடலை, தட்டைப்பயிறு, பருத்தி, ஆமணக்கு, நெல், முட்டைக்கோஸ், வெண்டை, எலுமிச்சை, கரும்பு போன்ற பணப்பயிர்களை தாக்கும் பூச்சிகளை தனது விஷத்தன்மை கொண்ட எச்சிலை உட்செலுத்தி உடனுக்குடன் கொன்று விடும்.

பைரைட் வண்டு
இது தத்துப்பூச்சிகள், திரிப்ஸ், சிறிய கம்பளிப் புழுக்கள், இலை தின்னும் பூச்சிகளை விழுங்கும். தனது ஊசி போன்ற கொடுக்குகளால் பூச்சிகளை தாக்கி கொல்லும்.

பாலிடாக்ஸ் வண்டு
இவை அழிவு நாவாய்ப் பூச்சி என அழைக்கப்படுகிறது. இவை தங்களை விட அளவில் பெரிய இரையை தாக்கி ஊசி போன்ற தமது வாய் உறுப்புகளில் உள்ள நச்சை உட்செலுத்தி கொல்லும்.

ரிப்பிள் வண்டு
இவை நீர் நிலைகளில் காணப்படும், குளங்கள், நெல் வயல்கள், குட்டைகளில் தென்படும். கொசுக்கள் இதன் உணவு.

கிரீன் மிட்ரிட் வண்டு
இவை நெற்பயிரை தாக்கும் பூச்சிகளை அழித்து, அவற்றின் பெருக்கத்தை நிறுத்தும். நாள் ஒன்றுக்கு நெற் பயிர் அழிப்பானின் 10 முட்டைகள் அல்லது இரண்டு முதிர்ந்த பூச்சிகளை உண்ணும்.

பிரேயிங் மேண்டிட்ஸ் 
இடத்திற்கு ஏற்ப வண்ணங்களை மாற்றி கொள்ளும். தன் முன் கிடைக்கும் அனைத்து பூச்சிகளையும் உண்ணும். பகலில் மட்டும் வேட்டையாடும்.
இவ்வாறு பயிர் காக்கும் பூச்சிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தி பயிரில் தீங்கு விளைவிக்கும் பூச்சிகளை கட்டுப்படுத்தலாம்.
ந. ஜெயராஜ் 
துணை இயக்குனர்
நீர் மேலாண்மை பயிற்சி நிலையம், மதுரை.


Source : Dinamalar

Tuesday, July 18, 2017

விவசாயத்துக்குத் திரும்புகிறது மூன்றாம் தலைமுறை: வேளாண் பல்கலை. துணைவேந்தர் பெருமிதம்

farmer1

தமிழகத்தில் மூன்றாம் தலைமுறையைச் சேர்ந்த இளைஞர்களும், வேளாண் தொழிலையே தெரிந்திருக்காத புதியவர்களும் விவசாயத்தில் ஈடுபடத் தொடங்கியிருப்பது நம்பிக்கை அளிப்பதாக உள்ளது என்று வேளாண்மைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் கு.ராமசாமி தெரிவித்துள்ளார்.
கோவை கொடிசியா வளாகத்தில் அக்ரி இன்டெக்ஸ் 2017 என்ற பெயரிலான 17- ஆவது வேளாண் வணிகக் கண்காட்சி வெள்ளிக்கிழமை தொடங்கியது. கண்காட்சியின் தொடக்க விழாவில் துணைவேந்தர் கு.ராமசாமி பேசியதாவது:
விவசாயம் லாபம் ஈட்டும் தொழிலாகவும், நமது அடிப்படையான தொழிலாகவும் இருப்பதை உணர்ந்த மூன்றாவது தலைமுறையினர் தற்போது விவசாயத்துக்கு மீண்டும் திரும்பி வருகின்றனர். அவர்களுடன், விவசாயம் பற்றித் தெரியாத மற்றொரு தலைமுறையும் ஆர்வத்துடன் வருவது நம்பிக்கை அளிப்பதாக உள்ளது.
ஒரு காலத்தில் வேளாண் பல்கலைக்கழகத்தில் மொத்தம் உள்ள சுமார் 2,500 இடங்களுக்கு வெறும் 4 ஆயிரம் விண்ணப்பங்கள் மட்டுமே வந்து கொண்டிருந்தன. ஆனால் தற்போது 2,800 இடங்களுக்கு 53 ஆயிரம் விண்ணப்பங்கள் வருகின்றன. இளைய தலைமுறையினர் விழித்துக் கொண்டிருப்பதையே இவை காட்டுகின்றன என்றார் அவர்.
உணவு உற்பத்தியில் சாதிக்கும் தமிழகம்: நிகழ்ச்சியில் வேளாண் வணிக ஆணையர் சுன்னோங்கம் ஜடாக் சிரு சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசும்போது, அண்மைக்கால விவசாயம் காலநிலை மாற்றம், தொழிலாளர் பற்றாக்குறை, உற்பத்தி செலவு அதிகரிப்பு, போதிய விலை கிடைக்காதது போன்றவற்றால் பாதிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் சவால்களை எதிர்கொண்டு தமிழக விவசாயிகள் சாதித்து வருகின்றனர். 2010- 11- ஆம் ஆண்டைக் காட்டிலும் தற்போது 43 சதவீதம் உணவு தானிய உற்பத்தி அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டில் 1.13 கோடி டன் உணவு தானியம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது என்றார் அவர்.
இறைச்சிக்கும் சான்றிதழ்: கால்நடை அறிவியல் பல்கலைக்கழகத் துணைவேந்தர் எஸ்.திலகர் பேசும்போது, உற்பத்தியாளர்களாக இருக்கும் விவசாயிகள், தங்களது விளைபொருள்களை மதிப்புக் கூட்டி விற்பனை செய்வதை அறிந்து கொண்டால் அதிக லாபம் ஈட்ட முடியும்.
Source : Dinamani

டானாதோட்டம் முருங்கை கீரைக்கு மவுசு

முருங்கை சாகுபடி மாநிலத்தில் பல இடங்களில் வளமாக இருந்தாலும், குறிப்பிட்ட இடங்களில் சாகுபடியாகும் முருங்கைக்கும், கீரைக்கும் அதிக வரவேற்பு உள்ளது.
தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் இதன் விளைச்சல் அதிகம். தேனி மாவட்டத்தில் கடமலைகுண்டு, மயிலாடும்பாறை ஒன்றியப் பகுதிகளில் பலவிவசாயிகள் இதனை முழுநேரத் தொழிலாக கொண்டுள்ளனர்.
ராஜேந்திரநகர், கண்டமனூர், டானாதோட்டம் பகுதியில் உள்ள முருங்கை கீரை வியாபாரிகளால் அதிகம் விரும்பப்படுகிறது. 
இந்த பகுதியில் இருந்து தினமும் 20 டன் வரை காய வைக்கப்பட்டு, பக்குவப்படுத்தப்பட்ட முருங்கை கீரை கொள்முதல் செய்யப்படுகிறது. 
இதிலும் டானாதோட்டம் முருங்கை கீரைக்கு தான் சந்தை மதிப்பு சற்று அதிகம்.
முருங்கையின் காய்ப்பு காலம் இல்லாத காலங்களில் இதன் கீரை விவசாயிகளுக்கு வாழ்வு தருகிறது. 
இதன் கீரை 50 ரூபாய் முதல் 90 ரூபாய் வரை சீசனுக்கு தகுந்தவாறு விற்பனையாகிறது.
இந்த கீரையில் புரோட்டீன், கால்சியம், பொட்டாசியம், இரும்பு மற்றும் வைட்டமின் சி' சத்துகள் உள்ளது. செயற்கை உரம், பூச்சி மருந்து பயன்படுத்தப்படாத நாட்டு ரக முருங்கை மரத்தின் கீரைக்கு மருத்துவ உலகிலும் அதிக வரவேற்பு உள்ளது.
மரத்தில் இருந்து எடுக்கப்பட்ட கீரையை காயவைத்து அதில் கழிவுகள், கொப்புகள் அகற்றி சுத்தம் செய்யப்பட்ட பின் அவற்றை மதுரை, திண்டுக்கல் பகுதி வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர். 
இவை அரைக்கப்பட்டு பவுடராக மருந்துக் காக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
டானாவூரில் முருங்கை கீரை சாகுபடி மற்றும் கொள்முதல் செய்யும் சுப்புராஜ் கூறுகையில், இயற்கை உரம் பயன்படுத்தினாலும் மண்ணின் தன்மைக்கு ஏற்ப டானாதோட்டம் பகுதியில் உள்ள முருங்கை கீரையின் சுவையும், தன்மையும் மற்ற இடங்களில் இல்லை. 
அதனால் இந்த பகுதியில் உள்ள கீரைக்கு முக்கியத்துவம் உண்டு. 
கீரையை பக்குவப் படுத்தி எடுப்பது சற்று சிரமமானது. இந்த பகுதியில் மட்டும் தினமும் 4 டன் வரை கீரை கிடைக்கிறது. தற்போது ஒரு கிலோ 50 ரூபாய் வரை விற்பனையாகிறது. மழை காலம் துவங்கினால் இதன் விலை அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. கடந்த 4 ஆண்டுகளாக கீரை சாகுபடி பல விவசாயிகளுக்கு நல்ல வாழ்வாதாரமாக உள்ளது,'' என்கிறார்.
தொடர்புக்கு 76397 92103
டபிள்யு.எட்வின்
துரை.


Source : Dinamalar

நிழலுக்குள் உயரம்தேடும் மிளகாய் செடிகள்


திறந்தவெளியில், இரண்டடி உயரத்தில் வளரும் புல்லட் ரக மிளகாய்ச் செடிகள், நிழல்வலை குடிலில் எட்டடி உயரம்தொட்டு அதிசயம் செய்கின்றன. 
திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார் சத்திரத்தில், உள்ள காய்கனி மகத்துவ மையத்தின் செயல் விளக்கத் திடலில் கொத்து கொத்தாக காய்த்துத் தொங்கும் பச்சை மிளகாய்கள், பிரமிப்பை ஏற்படுத்துகிறது என்றால் மிகையில்லை. 
ஒரு சதுர சென்டி மீட்டர் வலைக்குள், 36 சன்னரக துளைகள் இருப்பதால் பூச்சி களுக்கு தடா. 
அடுத்தடுத்து இரண்டு கதவுகளும் இதேவலையில் தயாரிக்கப்பட்டுள்ளதால், வெளியில் இருந்து பூச்சிகள் உள்ளே நுழைவதற்கு வாய்ப்பில்லாத நிலையில் செடிகள் சிலுசிலுவென பசுமை படர்ந்து பரவசப் படுத்துகின்றன.
இந்திய இஸ்ரேல் தொழில்நுட்பத்தில் 36 க்கு 30 மீட்டர் அளவில் 4 லட்சத்து 29 ஆயிரம் ரூபாய் செலவில் அமைக்கப் பட்டுள்ள இந்த குடிலில் 1,050 புல்லட் ரக மிளகாய் நாற்றுகள் நடப்பட்டன. 
பயிருக்கு தெளிக்க வேண்டிய பூச்சிமருந்துகளை தவிர்க்கலாம் என்கிறார், தோட்டக்கலை உதவி இயக்குனர் சீனிவாசன். அவர் கூறியது: 
தரைப்பகுதியில் பயிர்கள் வளர்க்க வேண்டியபகுதியில், முதலில் சொட்டுநீர் பாசனம் அமைக்கப் படுகிறது. 
அதன் மேல் பிளாஸ்டிக் நிலப்போர்வை, பாய் போல நீண்ட வரிசையில் விரிக்கப்பட்டு, நாற்று நட வேண்டிய இடம் மட்டும் துளையிடப் படுகிறது.
நாற்று வரிசைக்கு இடைப்பட்ட பகுதியில் கருப்பு நிற களையை நீக்கும் பாய் விரிக்கப்படுகிறது. பிளாஸ்டிக் நிலப் போர்வையால் தண்ணீர் ஆவியாவது தடுக்கப்படுகிறது. சொட்டு நீர் வழக்கத்தை விட குறைந்தளவே தரப்படுகிறது.
சீதோஷ்ணத்தை கட்டுப்படுத்தும் வகையில் 'பாகர்ஸ்' எனப்படும் நுண்நீர் தெளிப்பான் மூலம் பனிப்புகை போன்ற சிறு துகள்களாக தண்ணீர் தெளிக்கப்படுவதால், 4 டிகிரி வெப்ப நிலை வரை குறைக்கப்படுகிறது. ஒரு துளையின் வழியாக ஏழரை லிட்டர் தண்ணீர் மட்டுமே வரும். 
எட்டு மாதங்களை கடந்த நிலையில், இன்னும் மிளகாய்ச் செடிகள் பலன்தந்து கொண்டிருக்கின்றன. 
வழக்கமாக திறந்தவெளியில் நடப்படும், இதே ரக மிளகாய்ச் செடிகள், இரண்டடி உயரத்தில் செடி ஒன்றுக்கு ஒன்றே கால் கிலோ மிளகாய் வீதம் எட்டுமாதங்கள் வரை கிடைக்கிறது. ஆனால் நிழல்வலை குடிலில் இந்த மிளகாய்ச் செடிகள் அதிகபட்சமாக, எட்டடி உயரம் வரை வளர்வதோடு நிறைய சிம்புகள்விட்டு அதிகபட்சமாக மூன்றரை கிலோ வரை காய்க்கின்றன. 11 மாதங்கள் வரை தொடர்ந்து பலன்தருகின்றன, என்றார்.
இத்தொழில்நுட்பம் குறித்து விவசாயிகள் சீனிவாசனை 94434 55477ல் தொடர்பு கொள்ளலாம்.
-எம்.எம்.ஜெயலெட்சுமி
மதுரை 


Source : Dinamalar

Monday, July 10, 2017

தேயிலையில் மருந்து தயாரிக்கும் திட்டம்


நீலகிரி தேயிலையில் இருந்து மருந்து தயாரிக்க கைகாட்டி, மகாலிங்கா கூட்டுறவு ஆலைகளில் ரூ.5 கோடி மதிப்பீட்டில் உற்பத்தி பிரிவு துவக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  நீலகிரி மாவட்டத்தில் தேயிலை விவசாயம் முக்கியத்தொழிலாக உள்ளது. இதை முன்னிட்டு மாவட்டத்தில் தொழில் வணிகத் துறையின் கீழ் 15 கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது. இதில் சுமார் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்களிடம் இருந்து தினசரி கொள்முதல் செய்யப்படும் பசுந்தேயிலையை கொண்டு தொழிற்சாலைகளில் தினசரி தேயிலைதூள் உற்பத்தி செய்யப்படுகிறது. 
பெரும்பாலான தொழிற்சாலைகளில் சி.டி.சி ரக தேயிலைதூள் உற்பத்தியும் ஒரு சில தொழிற்சாலைகளில் சி.டி.சி ரகத்துடன் ஆர்த்தோடக்ஸ் தேயிலை தூளும் உற்பத்தி செய்யப்படுகிறது. 

இந்நிலையில் கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளில் தேயிலை தூளுடன் பசுந்தேயிலையில் மருந்து தயாரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.  இதுகுறித்து இண்ட்கோ சர்வ் சேர்மன் சிவக்குமார் கூறியதாவது: முதற்கட்டமாக கைகாட்டி மற்றும் மகாலிங்கா தேயிலை தொழிற்சாலைகளில் மருந்து தயாரிப்பதற்கான உற்பத்தி பிரிவு துவக்கப்பட உள்ளது. இதற்காக தமிழக அரசு ரூ.5 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. இதன் மூலம் விரைவில் இத்தொழிற்சாலைகளில் மதிப்பு கூட்டப்பட்ட மருந்து தயாரிப்பதற்கான உற்பத்தி பிரிவு துவக்கப்படும். இதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து மற்ற கூட்டுறவு தொழிற்சாலைகளிலும் படிப்படியாக மருந்து உற்பத்தி செய்யப்படும் என சிவக்குமார் தெரிவித்தார்.

Source : Dinakaran

Friday, July 7, 2017

தென்னையில் கூன் வண்டு தாக்குதல் மேலாண்மை

தென்னையில் கூன் வண்டு தாக்குதல் மேலாண்மை

tree

கிருஷ்ணகிரி: விவசாயிகளுக்கு நல்ல வருவாய் தரக் கூடிய பயிராக தென்னை தமிழகம் முழுவதும் பரவலாக சாகுபடி செய்யப்படுகிறது. இத்தகைய பயிரான தென்னையில் பூச்சி மற்றும் நோய் தாக்குதலால் மகசூல் குறைந்து விவசாயிகள் பாதிக்கப்படும் நிலை ஏற்படுகிறது. குறிப்பாக, கூன்வண்டு தாக்குதலால் தென்னை மரம் பட்டுப்போகிறது. எனவே, விவசாயிகள் கூன்வண்டு தாக்குதல் மேலாண்மையைக் கையாள்வதன் மூலம் தென்னை சாகுபடியில் மகசூல் குறைவதை தடுத்து, நல்ல வருவாய் ஈட்டலாம்.
அறிகுறிகள்: வண்டு தாக்குதலுக்கு உள்ளான மரத்தின் கீழ் பகுதியில் சிறப்பு நிறச் சாறு வடிந்த நிலையில், சிறு சிறு துளைகள் காணப்படும்.
இந்த துளையினுள் கூன் வண்டு இருப்பதைக் காணலாம். தென்னை மரத்தின் உள் ஓலைகள் மஞ்சள் நிறாகவும், நுனிப்பக்கத்தில் உள்ள நடுகுருத்து வாடிய நிலையிலும் காணப்படும். பின்னர், மரம் முற்றிலும் காய்ந்துவிடும்.
பூச்சி விவரம்: கூன் வண்டின் முட்டையானது வெள்ளை நிறத்தில் காணப்படும்.
புழுக்கள் லேசான மஞ்சள் நிறத்தில் காணப்படும். வண்டானது சிவப்பு கலந்த மஞ்சள் நிறத்திலும், மார்புப் பகுதியில் 6 அடர்ந்த புள்ளிகள் காணப்படும். ஆண் வண்டுகள் நீல முகத்துடன் காணப்படும்.
மேலாண்மை முறைகள்: கூன்வண்டு தாக்குதலால் காய்ந்து போன மரம், சேதமடைந்த மரத்தை அகற்றி, கூன்வண்டின் இனப்பெருக்கத்தை தடுக்கலாம்.
தென்னந்தோப்பை துய்மையாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருப்பதன் மூலம் கூன்வண்டின் தாக்குதலைத் தவீர்க்கலாம்.
உழவுப் பணியின்போது தென்னை மரம் சேதமடையாமல் பாதுகாப்பாக இருக்க வேண்டும். காண்டாமிருக வண்டுகள் தாக்கிய மரத்தை கூன்வண்டுகள் தாக்கும்.
அதனால், மரத்தை காண்டாமிருக வண்டுகள் தாக்காமல் இருக்க தக்க பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
கூன்வண்டுகள் முட்டை இடுவதைத் தடுக்க மணல், வேப்பங்கொட்டை தூளை 2:1 என்ற அளவில் கலந்து, மரத்தின் குருத்து பகுதியிலும், மேல் உள்ள மரத்தின் 3 மட்டைகளின் கீழ்ப் பகுதியிலும் இட வேண்டும்.
கூன்வண்டுகளைக் கவர்ந்து இழுக்கும் பேரொழியுர் எனப்படும் கவர்ச்சி மற்றும் உணவுப் பொறிகளை இரண்டு ஹெக்டேருக்கு ஒன்று வீதம் வைத்து கூன்வண்டுகளைக் கட்டுப்படுத்தலாம்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கிருஷ்ணகிரி அருகே உள்ள மூங்கில் புதூர் கிராமத்தில் மாணிக்கம் என்ற விவசாயின் நிலத்தில் மேற்கொண்ட சோதனையில் இந்த மேலாண்மை முறை நல்ல பயனைத் தந்துள்ளது என்கின்றனர் பெங்களூரைச் சேர்ந்த வேளாண் அறிவியல் விஞ்ஞானிகள்.
 Source : Dinamani

நாற்று நடவு முறையில் துவரை சாகுபடி


dall

தருமபுரி: பருவமழை தவறினாலும், பருவம் போகாமல், புதிய தொழில்நுட்பமமான நாற்று நடவு முறையில் துவரை சாகுபடி செய்ய முடியும் என்று தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் என். ராஜேந்திரன் மற்றும் அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர் பி.ரவி ஆகியோர் தெரிவித்தனர்.
இது தொடர்பாக, மேலும் அவர்கள் கூறியது: பயிர் வகையிலே துவரை பயிர் மட்டும் பருவம் மாறாமல் பயிர் செய்ய வேண்டும். பருவம் தவறி பயிர் செய்தால் கண்டிப்பாக மகசூல் பாதிக்கும். இதனைப் போக்க, புதிய தொழில்நுட்மான நாற்று நடவு துவரை சாகுபடி முறையைப் பின்பற்றி, துவரையில் அதிக மகசூல் பெறலாம். இதற்கான பருவம் ஆடிப் பட்டம் சிறந்தது.
நாற்றங்கால் தயாரித்தல்: துவரை நாற்று நடவு முறை சாகுபடிக்கு, ஏக்கருக்கு 1 கிலோ விதை மட்டுமே தேவைப்படுகிறது. ஒரு கிலோ விதையுடன் 2 கிராம் கார்பெண்டாசிம் அல்லது 2 கிராம் திரம் அல்லது 4 கிராம் டிரிக்கோடேர்மாவிரிடி போன்றவற்றில் ஏதாவது ஓன்றில் விதை நேர்த்தி செய்து 24 மணி நேரத்துக்குப் பிறகு, ஒரு பாக்கெட் ரைசோபியம் நுண்ணுயிர் கொண்டு விதை நேர்த்தி செய்து விதைக்க வேண்டும்.
மணல், மண், எரு ஆகியவற்றை சம அளவில் கலந்து 2?? மைக்ரான் உள்ள 6''-க்கு 4'' அளவுள்ள நெகிழிப் பைகளில் நிரப்பி விதைக்கப் பயன்படுத்த வேண்டும். பைகளில் தண்ணீர் தேங்குவதைத் தவிர்க்க பைகளைச் சுற்றி 4 துளைகள் போட வேண்டும். பின்னர், விதை நேர்த்தி செய்த விதைகளை ஒரு பைக்கு ஒரு விதை என்ற அளவில் ஒரு செ.மீ. ஆழத்தில் விதைத்து, ஒவ்வொரு நாளும் தண்ணீர் தெளித்து பாதுகாக்க வேண்டும். இவ்வாறு, விதைப்பு செய்யப்பட்ட பைகளை நிழலான இடங்களில் வைத்து 30 - 35 நாள்கள் பாரமரிக்க வேண்டும். நடுவதற்கு சில நாள்கள் முன் இளம் வெயிலில் நாற்றுகளை வைத்து, கடினப்படுத்தி பின்பு நடவு செய்தல் நல்லது.
நடவு செய்தல்: தனிப்பயிர் சாகுபடிக்கு 15 செ.மீ. அளவுள்ள குழிகளை, 5-க்கு 3 அடி இடைவெளிலும் ( 2904 பயிர் / ஏக்கர்), காராமணி, உளுந்து போன்ற ஊடுப்பயிர் சாகுபடி செய்யக்கூடிய இடங்களில் 6-க்கு 3 அடி இடைவெளிலும் (2420 பயிர் / ஏக்கர் ) குழிகள் எடுக்க வேண்டும். நாற்றுகளை நடுவதற்கு 15 நாள்களுக்கு முன், குழிகளை மண் எருவைக் கொண்டு நிரப்பி வைக்க வேண்டும். ஒரு குழிக்கு ஒரு செடி வீதம் நடவு செய்யப்பட வேண்டும். பின்னர், மண்ணின் ஈரப்பதத்துக்கு ஏற்ப 3-4 முறை பாசனம் செய்யப்பட வேண்டும். நடவு செய்த 30-40 நாள்கள் வரை களையின்றி பராமரிக்க வேண்டும்.
உர நிர்வாகம்: மானாவாரி பயிர்களுக்கு ஹெக்டேருக்கு யூரியா 27.5 கிலோ, சூப்பர் பாஸ்பேட் 156 கிலோ, பொட்டாஷ் 21 கிலோ இட வேண்டும். இறவைப் பயிர்களுக்கு யூரியா 55 கிலோ, சூப்பர் பாஸ்பேட் 312 கிலோ, பொட்டாஷ் 42 கிலோ ஆகிய உரங்களை நடவு செய்த 20-30 நாள்கள் கழித்து மண் அணைப்பதற்கு முன் இட வேண்டும். மேலும், துத்தநாக சல்பேட் 10 கிலோ செடியைச் சுற்றி இடுவதால், அதிக விளைச்சல் கிடைக்கும்.
நுனி கிள்ளுதல்: நடவு செய்த 20-25 நாள்கள் கழித்து அல்லது விதை விதைத்த 50-55 நாள்கள் கழித்து 5 அல்லது 6 செ.மீ அளவுக்கு நுனிக் குருத்தைக் கிள்ளி விடுவதால், பக்க கிளைகள் அதிகரிக்கும். இதனால் பயிரின் மகசூல் அதிகரிக்கும்.
பயறு வொண்டர் தெளித்தல் : பூ பூக்கத் தொடங்கும் பருவத்தில், பயறு வொண்டரை ஏக்கருக்கு 2 கிலோ என்ற அளவில் தண்ணீரில் கலந்து இலை வழியாகத் தெளிப்பதன் மூலம் பூ உதிர்தலைத் தடுக்கலாம். இதனால் அதிக மகசூல் பெறலாம். மேலும், வறட்சியைத் தாங்கி வளரவும் வழிவகை செய்கிறது.
நாற்று நடவு சாகுபடியின் நன்மைகள்: நடவு முறையில் மழை தாமதமானாலும் குறித்த பருவத்தில் பயிர் செய்ய முடியும். துவரை நடவு அதிக ஆழத்தில் செய்யப்படுவதால், நன்கு வேர் வளர்ச்சி காணப்பட்டு, பயிர் வறட்சியைத் தாங்கி வளரும். வரிசை நடவு முறை செய்யப்படுவதால், பயிர் பாதுகாப்பு முறைகளை எளிமையாகவும் திறம்படவும் செய்ய முடியும். கணிசமான அளவுக்கு விதை சேமிப்பு செய்ய முடிகிறது. இதனால், குறைந்த அளவுக்கு கிடைக்கும் புதிய ரக விதைகளை அதிக பரப்பளவு சாகுபடிக்கு கொண்டு வர முடியும். நுனி கிள்ளுவதால் அதிக பக்க கிளைகள் உருவாகி, அதிக விளைச்சல் கிடைக்கிறது.
எனவே, விவசாயிகள் ஆடிப்பட்டத்தில் பருவமழை தவறினாலும், இந்தப் புதிய தொழில்நுட்பமான துவரை நாற்று நடவு தொழில்நுட்பத்தைக் கடைப்பிடித்து, அதிக மகசூல் பெற்று பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம் என்றனர்.
 Source : Dinamani

Wednesday, July 5, 2017

சர்க்கரை நோயாளிகளுக்கு 'கறுப்புகாவனி' அரிசி:இயற்கை முறையில் விளைவித்து பொன்னேரி விவசாயி அசத்தல்

சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த, 'கறுப்புகாவனி' மற்றும் ஆர்.என்.ஆர்., நெல் ரகங்களை இயற்கை உரங்களை போட்டு, வளர்த்து அறுவடை செய்து விவசாயி அசத்தி உள்ளார்.பொன்னேரி அடுத்த, சின்னகாவணம் கிராமத்தைச் சேர்ந்தவர் தேவராஜன். இவர், இயற்கை விவசாயத்தின் மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர். அதே போன்று, நாட்டின் பல்வேறு பகுதிகளில் விளைவிக்கப்படும் நெல் ரகங்களை பற்றி தெரிந்து கொண்டு, அதை வளர்ப்பதில் ஆர்வம் காட்டுவார்.

பெருமிதம்
தற்போது, சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்ததாக கருதப்படும், 'கறுப்புகாவனி' நெல் ரகத்தினை பயிரிட்டு அசத்தியுள்ளார்.ஐந்து மாதங்கள் பருவ காலம் கொண்ட இந்த ரகத்தினை, தன் ஒன்றரை ஏக்கர் நிலத்தில் பயிரிட்டு, 37 மூட்டை நெல்லை அறுவடை செய்துள்ளார்.

கறுப்பு நிறத்தில் உள்ள இந்த அரிசியை சர்க்கரை நோயாளிகள் வாங்கி செல்வதாகவும், இதில் சர்க்கரை சத்து முற்றிலும் இல்லை எனவும் விவசாயி பெருமிதத்துடன் கூறுகிறார்.
அதேபோன்று, தோட்டக்கலை துறை மூலம், மஹாராஷ்டிரா மாநிலத்திற்கு, விவசாயம் குறித்து பயிற்சிக்கு சென்றவர் அங்கிருந்து, ஆர்.என்.ஆர்., ரக நெல் விதையை வாங்கி வந்து, விளைவித்து உள்ளார்.இதுவும் சர்க்கரை சத்து குறைவு என்பதால், நீரிழிவு நோயாளிகளுக்கு உகந்ததாகும். தற்போது இந்த வகை நெல் ரகத்தினை தன், 3 ஏக்கர் நிலத்தில்
மீண்டும் பயிரிட்டு உள்ளார்.


அமிர்த கரைசல்

பயிர்களுக்கு ரசாயன மருந்துகளை தெளிக்காமல் தொழு உரம், வேப்பம் புண்ணாக்கு, சூடோமோனாஸ் என, இயற்கை உரங்களை போட்டு விவசாயம் செய்கிறார்.பயிர் வளர்ச்சிக்கு மீன் அமினோ அமிலம், பயிரின் ஊட்டசத்திற்கு பழங்காடி, நோய் தாக்குதலில் இருந்து காக்க
அரிசி கஞ்சி கரைசல், தழை சத்திற்கு அமிர்த கரைசல் என, பல்வேறு வகையான இயற்கை உரங்களையும் பயன்படுத்துகிறார்.
இவரிடம் சர்க்கரை சத்து குறைவாக உள்ள அரிசி இருப்பதை அறிந்து, நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் வந்து வாங்கி செல்கின்றனர்.

Source: Dinamalar

Monday, July 3, 2017

ஒரு ஏக்கரில் திசு வாழை சாகுபடி செலவு ரூ.1 லட்சம்; லாபம் ரூ.5 லட்சம்


மதுரை மாவட்டம் மேலுார் அருகே வேப்படப்பை சேர்ந்தவர் வாழை விவசாயி ஜெகதீஸ்வரன். மேலுார் தோட்டக்கலைத் துறை மூலம் திசு மூலம் உற்பத்தி செய்யப்பட்ட 'ஜி.9.' ரக வாழையை சாகுபடி செய்து சாதனை படைத்துள்ளார்.தோட்டக்கலை உதவி அலுவலர் சண்முகசுந்தரம் கூறியதாவது: - வீரியமிக்க 'ஜி.9' ரகத்தைச் சேர்ந்த வாழை மரத்தில் இருந்து திசு மூலம் உற்பத்தி செய்யப்பட்ட வாழை கன்றுகளை விவசாயிகளுக்கு இலவசமாக கொடுக்கிறோம். நோய் தாக்குதல் இருக்காது. வீரியமிக்க வாழை என்பதால் பராமரிப்பு செலவு மிகவும் குறைவு. வாழை மரத்தின் துார் பகுதி கனமாக இருப்பதால் மழை, காற்று போன்ற இயற்கை இடர்பாடு பாதிப்புகளில் அதிக பாதிப்பு வராமல் பாதுகாக்கலாம். தோட்டக்கலை வழங்கும் அட்டவணைப்படி இயற்கை உரத்தை திசு ழைக்கு பயன்படுத்தினால் பிற வாழை விவசாயத்தை விட 3 மடங்கு லாபம் சம்பாதிக்கலாம் என்றார்.விவசாயி ஜெகதீஸ்வரன் கூறியதாவது: ஒரே நேரத்தில் வாழை தார்களை அறுவடை செய்ய முடிகிறது. பூவன், ஒட்டு போன்ற பிற ரகங்களை சேர்ந்த வாழைகளில் வாழைத்தாரில் உள்ள காய்களின் எண்ணிக்கையை பொறுத்து விலை நிர்ணயம் செய்யப்படும். ஆனால் திசு வாழையில் எடை கணக்கில் விற்பனை செய்யப்படுகிறது. ஏக்கருக்கு 33 டன் மகசூல் கிடைக்கிறது. ஏக்கருக்கு ஒரு லட்சம் ரூபாய் செலவாகிறது. லாபம் ஐந்து லட்சம் ரூபாய் கிடைக்கிறது என்றார். தொடர்புக்கு 97510 18008.
- எஸ்.பி.சரவணக்குமார் மேலுார்.

Source : Dinamalar

மண்ணில் புதைத்து பயன்படுத்தும் கால்நடை 'ஊறுகாய் புல்' தீவனம்

மழைக் காலத்தில் பசுந்தீவனம் தட்டுப்பாடு இருக்காது. வறட்சியில் கால்நடைகளுக்கு தீவனம் வழங்குவது பெரும் சவாலாகும். வறட்சியை சமாளிக்க முடியாமல் விவசாயிகள் பலர் மாடுகளை விற்று விடுவர். வறட்சியை சமாளிக்கும் வகையில் மூன்று ஆண்டு வரை தட்டுப்பாடு இன்றி கால்நடைகளுக்கு தீவனம் வழங்க வழிகாட்டுகிறார் தேனி மாவட்டம் தப்புக்குண்டு விவசாயி மணிகண்டன். இவர் 40 மாடுகளுடன் பால் பண்ணை நடத்துகிறார். தீவன தட்டுப்பாட்டை சமாளிக்க தேனி உழவர் பயிற்சி மையத்தை நாடினார்.தொழில் நுட்ப ஆலோசனை பெற்று தற்போது 120 டன் கால்நடை தீவனத்தை 'ஊறுகாய் புல்' ஆக தயாரித்து மண்ணில் புதைத்துள்ளார். தேவைக்கு ஏற்ப பயன்படுத்தி வருகிறார்.உலர வைத்தல்மணிகண்டன் கூறியதாவது: பசுந்தீவனத்தில் ஊறுகாய் புல் (சைலேஜ்) தயாரிக்க முடியும். கோ--4, தீவனச் சோளம், மக்காச் சோளம் ஆகியவற்றில் நீர்ச்சத்து 85 சதவிகிதம் உள்ளது. அதனை வெட்டி நிழலில் 2 மணிநேரம் உலர்த்தி 20 சதவிகித நீர்ச்சத்து வெளியேறி 65 சதவீத நீர் சத்துள்ள நிலையில் புல் வெட்டும் இயந்திரம் மூலம் இரண்டு, மூன்று துண்டாக வெட்டி கொள்ள வேண்டும். 10 அடி அகலம், இரண்டரை அடி ஆழத்தில் குழி எடுத்து அதில் 'தார்ப்பாய்' விரித்து கொள்ள வேண்டும்.
தயாரிப்புமுறை 100 கிலோ ஊறுகாய் புல் தயாரிக்க 2 சதவிகித மொலாசஸ் அல்லது இனிப்பு சத்து (கருப்பட்டி), 2 சதவிகித கம்பு மாவு, 0.5 சதவிகித தயிர் ஆகியவற்றை 2 லிட்டர் நீரில் கலந்து கரைசல் தயாரிக்க வேண்டும். பின் வெட்டிய தீவனத்தை குழியில் பரப்பி அதன் மீது கரைசலை தெளிக்க வேண்டும். அடுத்து தீவனத்தை பரப்பி கரைசல் தெளிக்க வேண்டும். தீவனத்தில் உள்ள ஆக்சிஜன் வெளியேறும் வகையில் 'இறுக்கம்' செய்ய வேண்டும். இதேபோல் 
தீவனத்தை அடுக்கி நெருக்கமாக செய்து மேலே தார்ப்பாய் கொண்டு காற்றுப்புக முடியாத வகையில் மூடி மேற்பரப்பில் மண்ணால் மூடிவிட வேண்டும். குறைந்தது மூன்று மாதம் திறக்க கூடாது. அதன்பின் குழியை திறந்து தேவைக்கு ஏற்ப பயன்டுத்தலாம்.120 டன் ஊறுகாய்வறட்சியால் விளைச்சல் இன்றி போகும் நிலையில் உள்ள பசுந்தீவனம் 20 ஏக்கர் 
மொத்தமாக வாங்கினேன். ஒரு குழியில் 15 முதல் 20 டன் என்ற அளவில் 'ஊறுகாய்புல்' தயாரித்து மூடியுள்ளேன். இதுபோன்று 8 குழிகள் உள்ளன. இதில் 120 டன் தீவனம் இருப்பு வைத்து தேவைக்கு ஏற்ப பயன்படுத்துகிறேன். 3 ஆண்டு வரை பயன்படுத்தலாம். இனிப்பு, கம்புமாவு, தயிர் கலவையால் நியூட்டரின் சத்து நிறைந்த ஊறுகாய் புல்லில் 'புரோ பயோடிக்' எனும் நன்மை செய்யும் நுண்ணுயிர் அதிகரித்து விடும். இதனை உண்ணும் கால்நடைகளுக்கு செரிமான கோளாறு வராது. 30 கிலோ பசுந்தீவனம் கொடுக்கும் நியூட்ரின் சத்து அதிகரித்து பால் சுரப்பு கூடும், என்றார். தொடர்புக்கு 99431 37658
-வி.ரவி, திண்டுக்கல்

Source : Dinamalar