Wednesday, December 20, 2017

நாட்டுக்கோழியில் நல்ல வருமானம்!


hen
திருநெல்வேலி: மிகக் குறைந்த முதலீட்டில் அதிக வருமானம் ஈட்ட நாட்டுக்கோழி வளர்ப்பு முறை சிறந்தது.
கிராமப் புறங்களில் வீட்டுக்குவீடு நாட்டுக் கோழி வளர்ப்பர். அதையே, கூடுதல் அக்கறையுடன் கோழிகளின் எண்ணிக்கையை அதிகமாக்கினால் மிகுந்த லாபம் பெறலாம். இன்றைய சூழலில் நாட்டுக்கோழிக்கு நல்ல விலை கிடைக்கிறது. 450 சதுர அடி இருந்தால் போதும். 10 கோழிகளை வளர்த்து மாதம் ரூ. 2,500 வரை வருமானம் ஈட்டலாம்.
ஒரு பெட்டைக்கோழி ஆண்டுக்கு 3 பருவங்களில் முட்டையிடும். ஒவ்வொரு முறையும் 15 முட்டைவரை இடும். முட்டை இடுவதை தேதி வாரியாக எழுதிவைத்து, கடைசியாக இட்ட 9 முட்டைகளை அடைகாக்க வைப்பது லாபகரம். நல்ல வளர்ச்சி பெற்ற ஒரு பெட்டைக் கோழியால் 9 முட்டைகளை மட்டுமே அடைகாக்க முடியும். 
அடுப்புச் சாம்பல், மணல் ஆகியவற்றைக் கலந்து கூடையில் நிரப்பி, ஈரப்பதத்தை உறிஞ்சி கதகதப்பை ஏற்படுத்த கரித்துண்டும், இடியைத் தாங்க இரும்புத் துண்டும் போட்டுவைக்க வேண்டும். இந்தக் கூடையில் கோழியை அடைகாக்கச் செய்வதன் மூலம் 9 முட்டைகளும் பொரியும் வாய்ப்புள்ளது.
குஞ்சுகள் பொரிந்ததும் அவற்றுக்கு முதல் வாரம், தினமும் மஞ்சள்தூள் கலந்து கொடுக்க தண்ணீர் வேண்டும். பின்னர், 3 வாரங்களுக்கு ஏதேனும் வைட்டமின் டானிக் மருந்தை சில சொட்டு கலந்து கொடுக்கலாம்.
வாரம் ஒருமுறை அரசு கால்நடை மருந்தகங்களில் கோழிக்கு தடுப்பு ஊசி போடவேண்டும். இதைத் தவறாமல் கடைப்பிடிப்பதன் மூலம் கோழிகளைப் பாதுகாப்பாக வளர்க்கலாம். 
கோழி வளர்க்கும் இடத்தைச் சுற்றி 4 அடி உயரத்துக்கு வலையால் வேலி போட வேண்டும். வேலியோரம் கீழ் மண்ணைக் குவித்து வைத்து சிமென்ட் பால் ஊற்றினால் பிற உயிரினங்களால் கோழிகளுக்கு தொல்லை ஏற்படாது.
வலை போட்டுள்ள பகுதியில் 3 அடிக்கு 3 அடி என்ற அளவில் சதுரமாக 3 அடி உயரத்தில் 3 குடிசை போட வேண்டும். நாட்டுக் கோழி குப்பையில் புரண்டு இறக்கையை உதறும். இதன்மூலம் உடம்பிலிருக்கும் 'செல்' போன்ற சின்னச் சின்ன உயிரினங்கள் வெளியேறும்.
பண்ணையில் குப்பைக்குழிக்கு வாய்ப்பில்லை. எனவே, தரையில் சாம்பல், மணலைக் கலந்து வைக்க வேண்டும். தீவனத் தொட்டி, தண்ணீர்க் குவளை போன்றவற்றையும் வைக்க வேண்டும். கோழிகளை சுதந்திரமாகத் திரிய விட வேண்டும்.
10 கோழிகளுக்கு ஒரு சேவல் என வளர்க்க வேண்டும். சில கோழிகள் அடிக்கடி பறந்து வெளியே செல்லும். அவற்றுக்கு மட்டும் ஒரு பக்க இறக்கையை 4 விரல் அளவுக்கு வெட்டினால்போதும். அவை பறக்காது. 
10 கோழிகளை வளர்ப்பது ஒரு யூனிட். அவ்வாறு பல யூனிட்களை உருவாக்கலாம். குஞ்சுகள் தாயிடமிருந்து பிரிந்ததும், அவற்றைக் கொண்டு யூனிட் அமைப்பது நல்லது.
கோழிகளின் உணவுக்காக கரையான் உற்பத்தி செய்து கொடுக்கலாம். அடுப்புக் கழிவுகள், காய்கறிக் கழிவுகள், இலை - தழைகள், வீணாகும் தானியங்கள் கொடுத்தால் போதும். 5 மாதங்களில் ஒன்றரை கிலோ அளவுக்கு வளர்ந்துவிடும். நாட்டுக்கோழி விற்பதில் சிரமமில்லை. நாம் விற்பது தெரிந்தால் வியாபாரிகள் வீடுதேடிவந்து வாங்கிச் செல்வர்.
Source : Dinamani 

No comments:

Post a Comment